மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் 6 மாதம் ஜாமீன் நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் 6 மாதம் ஜாமீன் நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் 6 மாதங்கள் ஜாமீனை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,


முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவரது பதவிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

இந்த ஜாமீனை நீட்டிக்கவும், ஜாமீன் நிபந்தனையை தளர்த்தவும் கோரி ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் வி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தில், 'முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க டி.ஜி.பி. பரிந்துரைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் என்பதால் கவர்னரிடம் ஒப்புதல் பெற 6 மாதம் ஆகும். எனவே இதற்கு அவகாசம் வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் ராேஜந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வக்கீல் கிரி, 'ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும் வகையில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும்' என வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு வழங்கிய ஜாமீனை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் அவர் தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும்பட்சத்தில் சென்னை ஐகோர்ட்டை அணுகி அனுமதி கோரலாம் என்றும் அறிவுறுத்தினர்.


Next Story