3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட்


3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்
x
தினத்தந்தி 10 Feb 2023 4:07 AM GMT (Updated: 10 Feb 2023 4:26 AM GMT)

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட் 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா,

பெரிய ரக செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகளின் மூலம் இஸ்ரோ செலுத்தி வருகிறது.

அந்த வகையில், சிறிய ரக செயற்கைக்கோள்களை சிறிய ராக்கெட்டுகளில் விண்ணில் செலுத்தும் வண்ணம் தொலைநோக்கு பார்வையில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட், தனது 15 நிமிட பயணத்தில் மூன்று செயற்கைக்கோள்களை 450 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் 'இ.ஓ.எஸ்-07' செயற்கைக்கோள், அமெரிக்காவைச் சேர்ந்த அண்டாரிஸ் நிறுவனத்தின் 'ஜேனஸ்-1' செயற்கைக்கோள், சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனத்தின் 'ஆஸாதிசாட்-2' ஆகிய 3 செயற்கைக்கோள் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இதில் 'ஆஸாதிசாட்-2' என்பது 750 மாணவிகள் இணைந்து உருவாக்கிய 8.7 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட 'எஸ்.எஸ்.எல்.வி-டி1' ராக்கெட், அதன் இரண்டாம் கட்ட நிலையில் தோல்வி அடைந்த நிலையில், இம்முறை ராக்கெட்டை மேம்படுத்தி வெற்றிகரமாக இஸ்ரோ செலுத்தியுள்ளது.


Next Story