19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சி சம்பவம்


19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சி சம்பவம்
x

19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்,

19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது;

அரியானா மாநிலம் ரிவாரி மாவட்டம் பாவல் என்ற பகுதியில் ராணுவ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 19 வயதான இளம்பெண் பயின்று வருகிறார்.

இதனிடையே, ராணுவத்தில் சேர்வதற்காக அந்த பயிற்சி வகுப்பில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய 3 இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். அந்த இளைஞர்களுக்கும் இளம்பெண்ணுக்கும் பயிற்சி வகுப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 3 வாரங்களுக்கு முன் அந்த இளம்பெண்ணை கவ்ஷாலா என்ற பகுதியில் உள்ள காட்டிற்கு அந்த 3 பேரும் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அந்த இளம்பெண்ணை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவோம் என பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனால், நடந்த சம்பவம் குறித்து பாதிக்கபப்ட்ட பெண் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால், இறுதியில் தனக்கு நடந்த கொடூரம் குறித்து அப்பெண் கடந்த திங்கட்கிழமை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story