சாம்ராஜ்நகர் மருத்துவ கல்லூரி டீனிடம் குடிபோதையில் தகராறு செய்த டாக்டர் மீது வழக்குப்பதிவு


சாம்ராஜ்நகர் மருத்துவ கல்லூரி டீனிடம்  குடிபோதையில் தகராறு செய்த டாக்டர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

சாம்ராஜ்நகர் மருத்துவ கல்லூரி டீனிடம் குடிபோதையில் தகராறு செய்த டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகர் தாலுகா எடபுரா அருகே மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு கண் சிகிச்சை பிரிவு டாக்டராக பணியாற்றி வருபவர் மகேஷ்குமார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் படித்து வரும் ஒரு மாணவரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவர், மருத்துவ கல்லூரி டீனான சஞ்சீவிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய டீன் சஞ்சீவ், டாக்டர் மகேஷ்குாமரை பணி இடைநீக்கம் செய்திருந்தார். இ்ந்த நிலையில் நேற்று அந்த பணி இடை நீக்கம் ஆணை திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் பணிக்கு திரும்பினார். அப்போது மீண்டும் அவர் அதேமாணவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவர், டீனிடம் புகார் அளித்தார். டீன், மகேஷ்குமாரை அழைத்து எச்சரித்தார்.

அப்போது டாக்டர் மகேஷ்குமார், சஞ்சீவிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் டாக்டர் மகேஷ்குமார் மது அருந்திவிட்டு குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சஞ்சீவ் சாம்ராஜ்நகர் புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மகேஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story