உத்தவ் ராஜினாமா செய்யமாட்டார்; சிவசேனாவினர் தெருக்களில் களமிறக்கப்படுவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை


உத்தவ் ராஜினாமா செய்யமாட்டார்; சிவசேனாவினர் தெருக்களில் களமிறக்கப்படுவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2022 7:50 AM GMT (Updated: 25 Jun 2022 8:03 AM GMT)

உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யமாட்டார், சிவசேனாவினர் தெருக்களில் களமிறக்கப்படுவர் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதில், 40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏக்னாந்த் ஷிண்டே அணியில் கவுகாத்தி ஓட்டலில் தங்கியுள்ள அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ. தனஜி சாவந்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கினர். மாநிலம் முழுவதும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் இன்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இது தான் சிவசேனா தொண்டர்களின் கோபம். தீ ஒருமுறை பற்றவைத்த பின் அதை அணைக்க முடியாது. சிவசேனா தொண்டர்கள் தெருக்களில் களமிறக்கப்படுவர். உத்தவ் தாக்கரே பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டார். சிவசேனா இறுதி வரை போராடும்' என்றார்.


Next Story