கள்ளக்காதலை கண்டித்ததால் பெண் கழுத்தை நெரித்து கொலை கணவர்-மகன் கைது


கள்ளக்காதலை கண்டித்ததால் பெண் கழுத்தை நெரித்து கொலை  கணவர்-மகன் கைது
x

கள்ளக்காதலை கண்டித்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த அவரது கணவர் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாசன்:

கள்ளத்தொடர்பு

ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்ணா தாலுகா, மரவஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி சுசீலம்மா (வயது 50). இவர்களது மகன் மனோஜ். மஞ்சுநாத்துக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு ெபண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சுசீலம்மா, மஞ்சுநாத்தை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தனது கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளார்.

மேலும் கள்ளத்தொடர்பை கண்டித்த சுசீலம்மாவை

மஞ்சுநாத் மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர் அடித்து, உதைத்து வந்துள்ளனர். இதுகுறித்தும், கணவரின் கள்ளக்காதல் குறித்தும் சென்னராயப்பட்டணா போலீசில் சுசீலம்மா புகார் கொடுத்துள்ளார்.

கொலை

இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தையும், மனோஜையும் அழைத்து எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் மஞ்சுநாத் கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுசீலம்மா, கணவர் மற்றும் மகனை பிரிந்து அந்தப்பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

ஆனாலும் கணவரும், மகனும் வந்து தினமும் சுசீலம்மாவிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து சுசீலம்மாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்கள் சுசீலம்மாவின் கழுத்தை நெரித்துள்ளனர். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சென்னராயப்பட்டணா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கொலையான சுசீலம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து தப்பி ஓடிய மஞ்சுநாத்தையும், அவரது மகன் மனோஜையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story