மைசூருவில் கால்சென்டர் பெண் ஊழியர் காரில் கடத்தி கற்பழிப்பு நண்பர் கைது; மேலும் 3 பேருக்கு வலைவீச்சு


மைசூருவில் கால்சென்டர் பெண் ஊழியர் காரில் கடத்தி கற்பழிப்பு நண்பர் கைது; மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Feb 2019 10:15 PM GMT (Updated: 10 Feb 2019 5:22 PM GMT)

மைசூருவில் கால்சென்டர் பெண் ஊழியரைகாரில்கடத்தி கற்பழித்த அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு, 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மைசூரு ஜே.பி. நகரை சேர்ந்தவர் 20 வயது பெண். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சிராக் (வயது 26) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். அந்த பெண் மைசூருவில் உள்ள கால்சென்டரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு 7.30 மணி அளவில் அந்த பெண், சித்தார்த் லே-அவுட் பகுதியில் பானி பூரி சாப்பிட சென்றார்.

பின்னர் அவர் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சிராக் காரில் வந்தார். அவர் காரில் வீட்டில் கொண்டு விடுவதாக கூறினார். இதனை நம்பிய அவர், சிராக்குடன் காரில் சென்றார்.

அந்த பெண்ணை காரில் அழைத்து சென்ற சிராக், அவரை ஜே.பி. நகருக்கு அழைத்து செல்லாமல், வேறு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னை இறக்கி விடும்படி சிராக்கிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே, அந்த காரில் சிராக்கின் நண்பர்கள் மேலும் 3 பேர் ஏறியுள்ளனர். பின்னர் சிராக், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தினார்.

அங்கு வைத்து, சிராக் மற்றும் அவருடைய 3 நண்பர்களும் சேர்ந்து அந்த பெண்ணை மாறி, மாறி கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள் 4 பேரும் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், அங்கிருந்து ஒரு ஆட்டோவை பிடித்து கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அந்த பெண் சிகிச்சை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் நஜர்பாத் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறி புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அந்த பெண்ணின் நண்பரான சிராக்கை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய சிராக்கின் நண்பர்கள் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story