ஹாவேரியில், டேங்கர் லாரி கவிழ்ந்தது சாலையில் ஆறாக ஓடிய சமையல் எண்ணெய் பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்து சென்றனர்


ஹாவேரியில், டேங்கர் லாரி கவிழ்ந்தது சாலையில் ஆறாக ஓடிய சமையல் எண்ணெய் பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்து சென்றனர்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:00 PM GMT (Updated: 17 Nov 2019 6:13 PM GMT)

ஹாவேரியில், டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது.

ஹாவேரி, 

ஹாவேரியில், டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இந்த எண்ணெயை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்து சென்றனர்.

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி

ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா கோந்தி கிராசில் நேற்று சமையல் எண்ணெயை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் லாரியின் இடிபாடுகளிடையே சிக்கி டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மேலும் டேங்கரில் இருந்த சமையல் எண்ணெய் சாலையோரம் கொட்டி ஆறாக ஓடியது.

சமையல் எண்ணெய் சாலையோரம் கொட்டி கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டில் இருந்து பாத்திரங்கள் மற்றும் கேன்களை எடுத்து வந்து சமையல் எண்ணெயை போட்டிபோட்டு பிடித்து சென்றனர். ஆனால் அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசார் விசாரணை

இதுபற்றி அறிந்ததும் ஆடூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சை வரவழைத்தனர்.

இதையடுத்து உயிருக்கு போராடிய 3 பேரையும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story