2 புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடிவு


2 புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடிவு
x
தினத்தந்தி 9 Jun 2021 7:25 PM GMT (Updated: 9 Jun 2021 7:25 PM GMT)

அரசு பஸ்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க 2 புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடிவு

பெங்களூரு:

போக்குவரத்து துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் அரசு பஸ்கள் விபத்துகளில் சிக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்பங்களை பஸ்களில் பொருத்த முடிவு செய்துள்ளோம். அதாவது "ஆர்டிபிசியல் இன்டிலிஜென்ஸ்" என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறோம். 

இத்தகைய தொழில்நுட்பம், வளர்ந்த நாடுகளில் தான் பயன்படுத்தப்படுகிறது. 2 வகையான தொழில்நுட்பம் இருக்கிறது. அதாவது சி.டபிள்யூ.எஸ்., டி.டி.எஸ். என்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இவற்றில் சி.டபிள்யூ.எஸ். தொழில்நுட்பம், பஸ்கள் தடுப்புகளின் அருகில் மோதுவது போல் சென்றாலோ அல்லது பிற வாகனங்களின் மிக அருகில் சென்றாலோ சத்தத்தை எழுப்பி டிரைவரை எச்சரிக்கும்.

டி.டி.எஸ். தொழில்நுட்பம், பஸ்கள் ஒடும்போது, டிரைவர்கள் தூங்கி பஸ்கள் தடுப்புகளின் அருகில் சென்றால் அது சத்தத்தை எழுப்பி எச்சரிக்கும். மேலும் இந்த எச்சரிக்கை குறித்து கட்டுப்பாட்டு அறைகளுக்கும் தகவல்களை அனுப்பும். 

இந்த தொழில்நுட்பங்கள் மூலம் விபத்துகளை தடுக்க முடியும்.
டிரைவர்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க இந்த தொழில்நுட்பங்கள் உதவியாக இருக்கும். நமக்கு நமது உயிர் முக்கியம். முதல் கட்டமாக 1,044 பஸ்களில் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் இந்த தொழில்நுட்பம் மற்ற பஸ்களுக்கும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு லட்சுமண் சவதி தெரிவித்துள்ளார்.

Next Story