புரட்சிகரமான நில சீர்திருத்த சட்டத்தை கொண்டு வந்தவர், தேவராஜ் அர்ஸ்; பசவராஜ் பொம்மை புகழாரம்


புரட்சிகரமான நில சீர்திருத்த சட்டத்தை கொண்டு வந்தவர், தேவராஜ் அர்ஸ்; பசவராஜ் பொம்மை புகழாரம்
x
தினத்தந்தி 20 Aug 2021 9:23 PM GMT (Updated: 20 Aug 2021 9:23 PM GMT)

புரட்சிகரமான நில சீர்திருத்த சட்டத்தை கொண்டு வந்தவர் தேவராஜ் அர்ஸ் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புகழாரம் சூட்டியுள்ளார்.

பெங்களூரு;

வேலை வாய்ப்பு

  கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்சின் 106-வது பிறந்த நாளையொட்டி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து தேவராஜ் அர்சின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

  கர்நாடகம் கண்ட மிகப்பெரும் தலைவர் தேவராஜ் அர்ஸ். அவர் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை செயல்படுத்தினார். அவரது பிறந்தநாள் தினம், நமது கடமைகளை நினைவுபடுத்தும் தினமாகும். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் சுயமரியாதையாக வாழவும் அரசு பணியாற்ற வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நில சீர்திருத்த சட்டம்

  தேவராஜ் அர்ஸ் அமல்படுத்திய புரட்சிகரகமான நில சீர்திருத்த சட்டம், அவரது கொள்கைகள் போன்றவை நமக்கு இன்றளவும் வழிகாட்டியாக உள்ளன. கர்நாடகத்தில் அனைவருக்கும் சமபங்கு, சம உரிமை என்ற தத்துவத்தை பின்பற்றி ஆட்சி செய்தவர் தேவராஜ் அர்ஸ். கர்நாடக அரசியலில் அவர் மிக முக்கிய தலைவராக இருந்துள்ளார். அவரது நடை அடையாளங்கள் கர்நாடகத்தில் நிரந்தரமாக இருக்கும்.

  அவரது பெயரில் பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளன. அவரது கொள்கைகள், திட்டங்கள் கட்சி சார்பற்று, அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கின்றன.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

  இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி, பி.சி.மோகன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story