3 சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கு வாலிபருக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை-மண்டியா கோர்ட்டு தீர்ப்பு


3 சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கு  வாலிபருக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை-மண்டியா கோர்ட்டு தீர்ப்பு
x

3 சிறுமிகளை ஏமாற்றி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மண்டியா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது

மண்டியா:

சிறுமிகள் பலாத்காரம்

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா ஆரகெரே பகுதியை சேர்ந்தவர் அஜய். இவர் அதே பகுதியை சேர்ந்த 6½ வயது, 7½ வயது, 10½ வயதுடைய 3 சிறுமிகளை கடந்த 2019-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குறிப்பாக சாக்லேட் கொடுப்பதாக சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து சென்று ஆபாச படங்களை காண்பித்து 3, 4 முறை பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவர்கள் ஆரகெரே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார்களின் ேபரில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்த போலீசார் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி அஜயை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவரை சிறையில் அடைத்தனர்.

30 ஆண்டு சிறை

பின்னர் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீசார் குற்றப்பத்திரிகையாக மண்டியா 2-வது விரைவு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து கோர்ட்டு விசாரணையை தொடங்கியது. கடந்த 2½ ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த வாரம் வழக்கு விசாரணை முடிந்தது. நேற்று இறுதி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி நாகஜோதி கூறியிருந்தார். அதன்படி நேற்று காலை நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட அஜய் மீதான சாட்சி ஆதாரங்கள் அவர் பாலியல் குற்றவாளி என்பதை உறுதி செய்திருப்பதாக கூறினார். பின்னர் இந்த குற்றத்திற்காக அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் அவரை மண்டியா சிறையில் அடைத்தனர்.


Next Story