குடிசை வீட்டுக்குள் கார் புகுந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்-3 பேர் கைது


குடிசை வீட்டுக்குள் கார் புகுந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்-3 பேர் கைது
x

குடிசை வீட்டுக்குள் கார் புகுந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்:

உருட்டு கட்டை தாக்குதல்

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் டவுன் பகுதியில் மாம்பழ மார்க்கெட் உள்ளது. அதன் அருகில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் பணியை மோகலஹள்ளி கிராமத்தை சேர்ந்த சிவப்பா செய்துவருகிறார். இவர் அந்த பகுதியில் குடிசை அமைத்து வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் தனது குடிசையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, அவரது குடிசை மீது மோதியது.

இதில் சிவப்பாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவர் காரில் வந்தவர்களிடம் அதுகுறித்து வாக்குவாதம் செய்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 3 பேர் அருகில் இருந்த உருட்டு கட்டைகளை எடுத்து சிவப்பாவை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சிவப்பா ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து 3 பேரும் காரில் ஏறி தப்பி சென்றனர்.

3 பேர் கைது

அக்கம்பக்கத்தினர் சிவப்பாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே தகவல் அறிந்து சீனிவாசப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், சிவப்பா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிவப்பாவை தாக்கியதாக கூறி 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சப்ரோஜ் கான் முஜாஹித், ஐதர் அலி என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story