3 அதிகாரிகள் உள்பட 10 போலீசார் பணி இடைநீக்கம்

மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவத்தில் 3 அதிகாரிகள் உள்பட 10 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புனே,
மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவத்தில் 3 அதிகாரிகள் உள்பட 10 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மந்திரி மீது கருப்பு மை வீச்சு
மராட்டிய மாநில உயர்கல்வி துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கடந்த சில நாட்களுக்கு முன் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து பள்ளிக்கூடங்களை தொடங்கினர் என பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் மீது புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் கருப்பு மை வீசப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து உள்ளனர். அவர்கள் அம்பேத்கரால் தொடங்கப்பட்ட சமதா சாய்னிக் தல் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில் மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 10 போலீசாரை புனே போலீஸ் கமிஷனர் அங்குஷ் ஷிண்டே அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மந்திரி மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவத்தில் 3 அதிகாரிகள் உள்பட 10 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து உள்ளோம். அவர்கள் அனைவரும் மந்திரி வருகையின் போது அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள்" என்றார்.






