ரூ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்- பயணி கைது
மதுபான பாட்டில்களில் மறைத்து கடத்தி வந்த ரூ.20 கோடி கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான பயணி கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மதுபான பாட்டில்களில் மறைத்து கடத்தி வந்த ரூ.20 கோடி கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான பயணி கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவல்
ஆப்பிரிக்க நாடான லாகோஸ்வில் இருந்து அடிஸ் அபாபா வழியாக மும்பைக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகப்படும்படியாக நடமாடிய ஒரு பயணியை பிடித்து உடைமையை சோதனை போட்டனர். இதில் தலா 1 லிட்டர் கொண்ட 2 மதுபான பாட்டில்கள் இருந்ததை கைப்பற்றினர்.
ரூ.20 கோடி
போதைப்பொருள் கண்டறிதல் கருவி மூலம் பாட்டில்களில் இருந்த திரவத்தை சோதனை போட்டதில், அதில் கொகைன் என்ற போதைப்பொருள் கலந்து இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த எடை 3 கிலோ 500 கிராம் ஆகும். கடத்தப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி ஆகும். இதையடுத்து கொகைன் கலக்கப்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதனை கடத்தி வந்த பயணியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.