உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டி நவாப் மாலிக் தகவல்


உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டி நவாப் மாலிக் தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2019 11:30 PM GMT (Updated: 17 Nov 2019 11:32 PM GMT)

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என நவாப் மாலிக் கூறியுள்ளார்.

மும்பை, 

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என நவாப் மாலிக் கூறியுள்ளார்.

மேயர் தேர்தல்

மராட்டியத்தில் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முன்வந்துள்ளன. விரைவில் இந்த புதிய கூட்டணி ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வருகிற 22-ந் தேதி மும்பை, தானே, புனே மாநகராட்சி உள்பட மாநிலத்தில் உள்ள 27 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேயர், துணை மேயர் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தலில் போட்டி

இந்தநிலையில் மேயர் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தனித்து வேட்பாளரை நிறுத்தும் என தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து தான் நாங்கள் சிவசேனாவுடன் பேசி வருகிறோம். 22-ந் தேதி நடைபெற உள்ள மேயர் தேர்தலில் இருந்து அது முற்றிலும் மாறுபட்டது. எங்கு எல்லாம் சாத்தியம் உள்ளதோ அங்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து சிவசேனாவுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்றார்.

Next Story