மராட்டியத்தில் டீசல் விலை உயர்வு எதிரொலி;அரசு பஸ் கட்டணம் திடீர் உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 25 Oct 2021 8:38 PM GMT (Updated: 25 Oct 2021 8:39 PM GMT)

மராட்டியத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு, அது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

மும்பை, 
மராட்டியத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு, அது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
பஸ் கட்டணம் உயர்வு
மராட்டியத்தில் மாநில சாலை போக்குவரத்து கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 95 ஆயிரம் பேர் போக்குவரத்து கழகத்தில் வேலை செய்கின்றனர்.  
இந்த பஸ்கள் மும்பையில் இருந்து புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் எம்.எஸ்.ஆர்.டி.சி.யின் அனைத்து வகை பஸ்களின் கட்டணத்தையும் அரசு நேற்று திடீரென உயர்த்தியது. 
ரூ.50 கோடி வருவாய்
இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சேகர் சன்னே கூறியதாவது:-
 கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே கட்டணம் உயர்த்துவால் ரூ.50 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். டீசல் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணத்தை 17.17 சதவீதம் உயர்த்த முடிவு செய்து உள்ளோம். கட்டண உயர்வு (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மாநில போக்குவரத்து கழகம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கட்டண உயர்வுக்கு மாநில போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
மேலும் பஸ் கட்டண உயா்வு குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 டீசலுக்கு அதிக செலவு
 மாநில போக்குவரத்து கழகத்திற்கு தினந்தோறும் டீசலுக்கு மட்டும் ரூ.8.8 கோடி செலவாகிறது. இது மொத்த செலவான ரூ.21 கோடியில் 38 சதவீதம் ஆகும். அதே நேரத்தில் அக்டோபரில் தினசரி சராசரி வருவாய் ரூ.12.9 கோடி தான். தற்போது தினந்தோறும் 27 லட்சம் பேர் அரசு பஸ்சில் பயணம் செய்கின்றனர். இது கொரோனா முன்பு இருந்த பயணிகள் எண்ணிக்கையில் 41 சதவீதம் தான். 
16 ஆயிரம் பஸ்சில் தற்போது 12 ஆயிரத்து 500 பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. கொரோனா காலத்தில் பயணிகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துவிட்டது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
 தீபாவளி சமயத்தில் மும்பை- புனே மற்றும் மும்பையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்சில் கூட்டம் அலைமோதும். இந்த நேரத்தில் மாநிலத்தில் ஏ.சி. உள்பட அனைத்து வகையான அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story