திருட்டு, கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5.41 கோடி நகை, பணம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருட்டு, கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் மற்றும் வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டது
மும்பை,
நவிமும்பை போலீசார் திருட்டு, கொள்ளை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வாஷியில் உள்ள சிட்கோ கண்காட்சி அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நவிமும்பை போலீஸ் கமிஷனர் மிலிந்த் பாரம்பே தலைமை தாங்கினார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த மாதம் வரை பதிவான 248 வழக்குகளில் ரூ.5.41 கோடி மதிப்பிலான நகை, பணம், வாகனங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். அதை வாஷியில் நடந்த நிகழ்ச்சியில் போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதில் 49 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.09 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் மட்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 174 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாகனங்கள், செல்போன், மடிக்கணினி போன்ற ரூ.3.32 கோடி மதிப்பிலான பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது. நகை, பணத்தை திரும்ப பெற்றவர்கள் அதை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.






