புனே அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் பிணமாக மீட்பு


புனே அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:46 PM GMT)

புனே அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனே,

புனே அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 உடல்கள் மீட்பு

புனே மாவட்டம் தவுன்ட் தாலுகா யவத் கிராமப்பகுதியில் உள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தொடர்ந்து ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று மேலும் 3 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டன.

தற்கொலை?

போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் காம்காவ் பகுதியை சேர்ந்த மோகன் உத்தம் பவார் (வயது50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என்பது தெரியவந்தது.

பிணமாக மீட்கப்பட்ட 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் 7 பேரின் மரணம் மற்றும் அதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், "ஆற்றில் ஒவ்வொருவரின் உடல்களும் 200 முதல் 300 மீட்டர் இடைவெளியில் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து தற்கொலை உள்பட எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்" என்றார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story