மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை,
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி பதவி பறிப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி, சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் போராட்டம்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். மராட்டியத்தில் மாநில முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். நாக்பூரில் மாநில தலைவர் நானா படோலே தலைமையில் போராட்டம் நடந்தது.
மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் சி.எஸ்.எம்.டி.யில் கட்சி அலுவலகத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூத்த தலைவர்கள் பாலாசாகிப் தோரட், பிரித்விராஜ் சவான், மும்பை தலைவர் பாய் ஜக்தாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுதவிர நகரின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






