காலணி அணிந்தபடி அஞ்சலி செலுத்தி சர்ச்சையில் சிக்கிய கவர்னர்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் காலணி அணிந்தபடி அஞ்சலி செலுத்திய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் காலணி அணிந்தபடி அஞ்சலி செலுத்திய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
கவர்னர் அஞ்சலி
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 14-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
காலணி அணிந்தபடி...
இதில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி காலணி அணிந்தபடி மரியாதை செலுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் டுவிட்டர் பதிவில், "அஞ்சலி செலுத்தும் போது காலணியை கழற்றுவது இந்திய கலாசாரம். கண்டிப்பாக அது மராட்டிய கலாசாரம். கவர்னர் தொடர்ந்து மராட்டியம் மற்றும் அதன் அடையாளம், கலாசாரத்தை அவமதித்து வருகிறார். காலணியை கழற்றிவிட்டு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கவர்னருக்கு நினைவுபடுத்தி இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர் சர்ச்சை
மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மும்பை நகரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். இதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரினார்.
சமீபத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் அவர் காலணி அணிந்து பயங்கரவாத தாக்குதலில் பலியான தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.






