வேலை பார்த்த வீட்டில் 3 பெண்களை கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை


வேலை பார்த்த வீட்டில் 3 பெண்களை கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Jun 2022 1:25 PM GMT (Updated: 1 July 2022 5:34 AM GMT)

காந்திவிலியில் வேலை பார்த்த வீட்டில் 3 பெண்களை கொலை செய்து விட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

காந்திவிலியில் வேலை பார்த்த வீட்டில் 3 பெண்களை கொலை செய்து விட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் வேலை

மும்பை காந்திவிலியை சேர்ந்தவர் கிரண் தல்வி(வயது46). இவரது மகள்கள் முஸ்கான் தல்வி(26), பூமி தல்வி(17). இந்தூரை சேர்ந்த இவர்களிடம் சிவ்தயால் சென்(60) என்பவர் கார் டிரைவராக கடந்த 10 ஆண்டாக வேலை பார்த்து வந்தார்.

கிரண் தல்வியின் மாமியார் ராதாபாய் என்பவருக்கு சொந்தமான ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ராதாபாய் உயிரிழந்துவிட்டதால், ஆஸ்பத்திரி மூடப்பட்டது. இதனால் கிரண் தல்வி தனது மகள்களுடன் வசித்து வந்தார்.

தாய், மகள்கள் கொலை

இந்தநிலையில் நேற்று இரவு 11.22 மணி அளவில் கார் டிரைவர் சிவ்தயால் சென் அவர்களது வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் கிரண் தல்வியின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கிரண் தல்வி, அவரது 2 மகள்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

டிரைவர் தற்கொலை

இதேபோல் டிரைவர் சிவ்தயால் சென்னும் வீட்டிற்குள் இறந்து கிடந்தார்.

இதையடுத்து போலீசார் அங்கிருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு சதாப்தி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் டிரைவர் சிவ்தயால் சென் தாய், மகள்கள் 3 பேரையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இருப்பினும் இதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காந்திவிலியில் 3 பேரை கொலை செய்துவிட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story