தாய்க்கு சிகிச்சை அளிக்க பணம்கேட்டு 4 எம்.எல்.ஏ.க்களிடம் மோசடி- மர்மநபருக்கு வலைவீச்சு

தாய்க்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்படுவதாக 4 எம்.எல்.ஏ.க்களிடம் போனில் பேசிய ஆசாமி பண மோசடி செய்தது தெரியவந்தது.
புனே,
தாய்க்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்படுவதாக 4 எம்.எல்.ஏ.க்களிடம் போனில் பேசிய ஆசாமி பண மோசடி செய்தது தெரியவந்தது.
தாயாருக்கு சிகிச்சை
புனே பார்வதி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. மாதுரி மிசால். இவருக்கு அண்மையில் அடையாளம் தெரியாத செல்போன் எண் ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. இந்த அழைப்பில் பேசிய நபர் தனது பெயர் முகேஷ் ராதோடு எனவும், தனது தாய்க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3 ஆயிரத்து 400 தேவைப்படுவதாகவும் கூறினார்.
இதனை கேட்ட எம்.எல்.ஏ. தனது மகளிடம் கூறி ஆன்லைன் மூலம் அந்த நபருக்கு பணம் அனுப்பி வைத்தார்.
4 எம்.எல்.ஏ.க்களிடம் மோசடி
இதையடுத்து சில நாட்கள் கழித்து நடந்த பா.ஜனதா கூட்டத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இதில் மாதுரி மிசாலிடம், சிகிச்சை அளிக்க பணம் கேட்டது மோசடி என்று தெரியவந்தது. மேகனா போர்டிகர், தேவயானி பாரண்டே மற்றும் ஸ்வேதா மகாலே ஆகிய எம்.எல்.ஏ.க்களிடமும் இதே பாணியில் மோசடி நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தநிலையில் மாதுரி மிசல் எம்.எல்.ஏ.வின் மகள் சம்பவம் குறித்து பிப்வே வாடி போலீசில் பணமோசடி செய்த ஆசாமி மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் நூதன மோசடி செய்த ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






