கிணற்றில் தவறி விழுந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர்- இருவரும் உயிரிழந்த சோகம்

கிணற்றில் தவறி விழுந்த மனைவியை கணவர் காப்பாற்ற முயன்றபோது இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
புனே,
கிணற்றில் தவறி விழுந்த மனைவியை கணவர் காப்பாற்ற முயன்றபோது இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
புதுமண தம்பதி
புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகா குக்டேஸ்வர் கிராமத்தை சேர்ந்தவர் சாகர். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு நஜூகா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் துணிகளை துவைக்க தம்பதி சென்றிருந்தனர். கிணற்றில் தண்ணீரை இறைத்த புதுமணப்பெண் நஜூகா திடீரென கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தார். இதனை கண்ட கணவர் சாகர் மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.
தண்ணீரில் போராடிய மனைவி நஜூகாவை காப்பாற்ற முயன்ற போது முடியாமல் போனது. இதனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இந்த சம்பவத்தை யாரும் கவனிக்கவில்லை.
2 பேர் உடல்கள் மீட்பு
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் செல்போன் ஒலித்தை கண்டனர். அருகில் யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர்கள் கிணற்றில் எட்டி பார்த்தனர். அப்போது புதுமண தம்பதி பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






