மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மண் சரிவு - விசாரணை நடத்த வர்ஷா கெய்க்வாட் வலியுறுத்தல்

மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மண் சரிவு ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வர்ஷா கெய்க்வாட் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மண் சரிவு ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வர்ஷா கெய்க்வாட் வலியுறுத்தி உள்ளார்.
ரெயில் நிலையம் அருகே மண்சரிவு
மும்பை போரிவிலி பகுதியில் உள்ள மகாதானே மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் கடந்த வாரம் மண்சரிவு ஏற்பட்டது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி மக்கள் இடையே பீதியை கிளப்பியது. இதையடுத்து சம்பவம் குறித்து மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் போலீசில் புகார் அளித்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பள்ளம் தோண்டி மண்சரிவுக்கு காரணமாக இருந்த கட்டுமான ஒப்பந்ததாரர் உள்பட 2 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மண்சரிவு ஏற்பட்ட பகுதியை நேற்று முன் தினம் மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் ஆய்வு செய்தார்.
விசாரணை நடத்த வேண்டும்
ஆய்வுக்கு பிறகு அவர் கூறியதாவது:-
மண்சரிவு சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மெட்ரோ ரெயில் நிலையத்தை சுற்றி 6 மீட்டருக்கு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்ற சட்டம் உள்ளது. அப்படி இருக்கும் போது இந்த சம்பவத்தில் மெட்ரோ ரெயில் நிலைய படிக்கட்டு அடித்து செல்லப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் மாநில அரசு, மாநகராட்சி, மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் கட்டுமான அதிபர்களுடன் கைகோர்த்து உள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






