பெஸ்ட் பஸ் மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி

மும்பை,
மும்பை மெரின் டிரைவ் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தவர் ஆசோக் தினகர்(வயது 43). இவர் நேற்று காலை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள தனது அரசு குடியிருப்பில் இருந்து மோட்டார் சைக்களில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். இவர் காலை 9 மணி அளவில் நேரு சாலையில் உள்ள நியூ மாடர்ன் பள்ளி அருகே சென்றுகொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த பெஸ்ட் பஸ் மோட்டார் சைக்கிளில் மீது பலமாக மோதியது.
இதில் இன்ஸ்பெக்டர் ஆசோக் தினகர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வி.என். தேசாய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு காரணமான 35 வயது பெஸ்ட் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






