ஆராய்ச்சி மாணவர் தீக்குளிப்பு; மாணவிக்கும் தீவைத்தார்

அவுரங்காபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தீக்குளித்ததுடன், சக மாணவிக்கும் தீவைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
அவுரங்காபாத்.
அவுரங்காபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தீக்குளித்ததுடன், சக மாணவிக்கும் தீவைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தீவைப்பு
அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மரத்வாடா பல்கலைக்கழக பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவன் கஜானன் முண்டே. இவர் நேற்று மதியம் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் அனுமன் தேக்டி பகுதியில் அமைந்துள்ள அரசு அறிவியல் நிறுவனத்திற்கு சென்றார்.
அங்கு உதவி பேராசிரியர் அறைக்கு சென்ற மாணவர் கஜானன் முண்டே, அங்கிருந்த சக மாணவி ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து அதில் இருந்த பெட்ரோலை தன்மீது உற்றிக்கொண்ட கஜானன் முண்டே, அந்த மாணவி மீதும் பெட்ரோலை ஊற்றினார். பின்னர் அவர் தனது உடலில் தீவைத்துகொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பிஓட முயற்சி செய்தபோது அவர் மீதும் தீ வைத்தார்.
தீவிர சிகிச்சை
இதனால் இருவரின் உடலில் தீப்பரவி எரிய தொடங்கியது. அவர்கள் வலியால் அலறினர். இந்த நிலையில் அங்கிருந்தவர்கள் இருவர் மீதும் பற்றிய தீயை அணைத்து அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் கஜானன் முண்டே 80 சதவீத தீக்காயத்துடனும், பெண் 50 சதவீத தீக்காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






