அனுமதி தராவிட்டாலும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்துவோம்- சிவசேனா அறிவிப்பு


அனுமதி தராவிட்டாலும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்துவோம்- சிவசேனா அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2022 11:15 PM GMT (Updated: 20 Sep 2022 11:16 PM GMT)

அனுமதி தராவிட்டாலும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்துவோம் என சிவசேனா அறிவித்துள்ளது.

மும்பை,

அனுமதி தராவிட்டாலும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்துவோம் என சிவசேனா அறிவித்துள்ளது.

அதிகாரிகளுடன் சந்திப்பு

சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணியினர் பி.கே.சி. எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. உத்தவ் தாக்கரே அணியினர் தாதர் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த மும்பை மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் தங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என விசாரிக்க உத்தவ் தாக்கரே அணி பிரதிநிதிகள் முன்னாள் மேயர் மிலிந்த் வைத்யா தலைமையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்தனர்.

தொண்டர்கள் திரள்வார்கள்

இந்த சந்திப்புக்கு பிறகு மிலிந்த் வைத்யா கூறியதாவது:-

எங்களுக்கு அனுமதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பொதுக்கூட்டத்துக்காக பால்தாக்கரேயின் சிவசேனா தொண்டர்கள் சிவாஜிபார்க்கில் கூடுவார்கள். மாநகராட்சி எங்களுக்கு அனுமதி தர வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். எனினும் நாங்கள் முடிவில் உறுதியாக உள்ளோம். எங்களுக்கு முடிவு கிடைக்காவிட்டால், சிவசேனாவினர் தசரா பொதுக்கூட்டத்துக்கு சிவாஜி பார்க்கில் திரள்வார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார், சிவாஜிபார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த சிவசேனாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


Next Story