மாட்டுங்கா காப்பகத்தில் கொலையான சிறுவன் யார்?- விசாரணைக்காக போலீசார் டெல்லி விரைந்தனர்


மாட்டுங்கா காப்பகத்தில் கொலையான சிறுவன் யார்?- விசாரணைக்காக போலீசார் டெல்லி விரைந்தனர்
x
தினத்தந்தி 20 Sep 2022 9:00 PM GMT (Updated: 20 Sep 2022 9:00 PM GMT)

டெல்லியில் மாட்டுங்கா காப்பகத்தில் கொலையான சிறுவன் யார் என விசாரணைக்காக போலீசார் டெல்லி விரைந்தனர்

மும்பை,

டெல்லியை சேர்ந்த சிறுவன் ஹஸ்வான் நிசாத்(வயது16). மனநலம் சரியில்லாத இவன், கடந்த மாதம் கிர்காவ் கடற்கரையோரம் சுற்றித்திரிந்த போது, போலீசார் மீட்டு மாட்டுங்கா காப்பகத்தில் ஒப்படைத்து இருந்தனர். மேலும் சிறுவனின் பெற்றோரை அடையாளம் காண அவனிடம் பேசிய போது, வெறும் 3 வார்த்தைகள் மட்டும் போலீசாரிடம் தெரிவித்து இருந்தான். இதில் பாரஸ் ஸ்குல், பஸ்தி பாடா மற்றும் ஸ்டார் சவுக் என 3 வார்த்தைகளை கொண்டு டெல்லி போலீசாரிடம் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி காப்பகத்தில் இருந்த ஹஸ்வான் நிசாத்தை 6 சிறுவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்தனர்.

மேலும் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவனது உடல் பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் அவனது பெற்றோரை கண்டுபிடிக்க மும்பை தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து உள்ளதாகவும், இதன்பின்னர் உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story