சகோதரியின் மகனை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது
சகோதரியின் மகனை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
சகோதரியின் மகனை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மனநலம் பாதிப்பு
தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்தவர் சதீஷ் துபே (வயது31). இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து அந்த அதிர்ச்சியில் சதீஷ் துபே மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் தேசேல்பாடாவில் வசித்து வந்த அவரது சகோதரி வீட்டில் தங்கி இருந்தார்.
அப்போது சகோதரியின் கணவர் சஞ்சய் திவாரி மற்றும் மாமனாருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து சண்டை போட்டு வந்தார். இதுபற்றி அறிந்த சகோதரியின் மகன் யாஷ் என்பவர் சதீஷ் துபேவை தட்டிக்கேட்டார். மேலும் அவரை லேசாக தாக்கியதாக கூறப்படுகிறது.
குத்திக்கொலை
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் துபே அங்கிருந்த கத்தியால் யாஷ்சை சரமாரியாக குத்தி கொலை செய்தார். இது பற்றி தகவல் அறிந்த மான்பாடா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் துபேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.