முடியாதது என்று எதுவுமில்லை; இந்தியா திரும்பிய லக்சயா சென் பேட்டி


முடியாதது என்று எதுவுமில்லை; இந்தியா திரும்பிய லக்சயா சென் பேட்டி
x
தினத்தந்தி 17 May 2022 2:39 AM GMT (Updated: 17 May 2022 2:39 AM GMT)

தாமஸ் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்து இந்தியா திரும்பிய லக்சயா சென் முடியாதது என்று எதுவுமில்லை என கூறியுள்ளார்.




பெங்களூரு,



தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தன.  இதில் ஆடவர் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.

இதனை தொடர்ந்து நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் இறுதி போட்டியில் லக்சயா சென் இந்திய அணி வெற்றி பெற பெரிதும் உதவினார்.  இறுதி போட்டியின் தொடக்க ஆட்டமொன்றில் விளையாடிய அவர், 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது இந்திய அணிக்கு பேருதவியாக இருந்தது.

இதனை தொடர்ந்து நடந்த போட்டிகளில் ஸ்ரீகாந்த் மற்றும் இரட்டையர் பிரவு ஜோடிகளான சாத்விக்சாய்ராஜ் ரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் அதிரடியாக விளையாடியதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தாமஸ் கோப்பையை வென்றது.

போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த லக்சயா சென் நேற்றிரவு கர்நாடகாவுக்கு திரும்பினார்.  அவர் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் அளித்த பேட்டியில், இந்தியாவுக்கு உண்மையில் அது ஒரு பெருமையான தருணம்.  ஓரணியாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டோம் என கூறினார்.  முதல் செட்டை இழந்தபோதும், 2வது மற்றும் 3வது செட்டில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

போட்டி முடிவடையும் நேரத்தில் படபடப்புடன் இருந்தேன்.  எனினும், அவசரம் கொள்ளாமல் இருந்தேன்.  முடிவுகளை பற்றி எண்ணாமல் இருக்க வேண்டும்.  முடியாதது என்று எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

லக்சயா சென்னுக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார்.


Next Story