என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் - ரங்கசாமி பேச்சு


என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும் - ரங்கசாமி பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:30 PM GMT (Updated: 16 April 2019 10:51 PM GMT)

புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால்தான் நிதி கிடைக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி நேற்று கதிர்காமம், இந்திராநகர் தொகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தார்.

அப்போது ரங்கசாமி பேசியதாவது:-

பொது வினியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அனைவருக்கும் வழங்குவதுதான் ஒரு சிறந்த அரசு செயல்படுவதற்கு உதாரணம். ஆனால் புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமும் இல்லை.

தற்போது ரேஷன் கடைகளில் எந்தவித பொருட்களும் வழங்கப்படுவது இல்லை. இந்த செயல்பாடு ஒன்றே இந்த அரசு சரியாக செயல்படவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்றாலும் தனியார் தொழிற்சாலைகளை கொண்டுவந்தாவது வேலைவாய்ப்பு தந்திருக்கலாம். ஆனால் அப்படியும் ஆட்சியாளர்கள் செய்யவில்லை.

இதனால் வேலையில்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் பாரதீய ஜனதா கூட்டணிதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. பிரதமர் மோடியும் சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார்.

மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி வெற்றிபெற்றால்தான் புதுச்சேரிக்கு நிறைய திட்டங்களும், நிதியும் கிடைக்கும். அந்தவகையில் இங்கு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்றால் மத்திய அரசில் பங்கு வகிக்க வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் புதுச்சேரிக்கு பல நன்மைகளும், புதிய திட்டங்களும் கிடைக்கும். இளைஞர்கள் வசம்தான் புதுச்சேரியின் எதிர்காலம் உள்ளது. அதனால்தான் இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். இளைஞர்கள்தான் எதிர்காலத்தில் பெரிய தலைவர்களாக வருவார்கள்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

Next Story