தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்தது 4 டாக்டர்கள் காயம்


தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்தது 4 டாக்டர்கள் காயம்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 10:27 PM GMT)

கிருமாம்பாக்கம் அருகே நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்தது. காரில் இருந்த 4 டாக்டர்கள் காயமடைந்தனர்.

பாகூர்,

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் கோகுல பிரியன் (வயது 28). இவர், கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றிக்கொண்டே மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு டாக்டர் கோகுல பிரியனும், அவருடன் மேலும் 3 டாக்டர்களான சிதம்பரத்தை சேர்ந்த அருண் (30), வடலூரை சேர்ந்த ரகு (33) கடலூரை சேர்ந்த அரவிந்தன் (25) அதே ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் காரில் கடலூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் மருத்துவக்கல்லூரிக்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

தாறுமாறாக ஓடிய கார்

கன்னியக்கோவில் புதுநகர் பகுதியில் அவர்கள் வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோடு ஓரத்தில் இருந்த மாரியம்மன் கோவில் வளாகத்துக்குள் புகுந்தது. இதில் கோவிலின் முன்பக்க சுவர் இடிந்து சேதம் அடைந்தது. இ்ந்த விபத்தில் காரில் இருந்த 4 டாக்டர்களும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் படித்து வரும் அதே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த கோவில் வளாகத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் வழியில் இரவில் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். நேற்று முன்தினம் பக்தர்கள் யாரும் அங்கு இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தனவேலு எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story