பாகூர் அருகே பயங்கரம்: கோஷ்டி மோதலில் லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


பாகூர் அருகே பயங்கரம்: கோஷ்டி மோதலில் லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Jan 2021 2:31 AM GMT (Updated: 17 Jan 2021 2:31 AM GMT)

பாகூர் அருகே மதுகுடித்த இடத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் லாரி உரிமையாளர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பாகூர், 

கடலூர் மாவட்டம் சாவடி அய்யா நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரின் மகன் மனோஜ் நந்தன் (வயது 30), லாரி உரிமையாளர். நேற்று காணும் பொங்கலையொட்டி அவர் தனது நண்பர்கள் கார்த்தி, பிரதாப் உள்ளிட்ட 5 பேருடன் புதுவை மாநிலம் பாகூர் அருகே சோரியாங்குப்பம் மதுக்கடைக்கு வந்தார். அங்கு மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு கடையின் பின்புறமுள்ள காலிமனையில் அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது அவர்களுக்கு அருகில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக அமர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறியதும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனை மனோஜ்நந்தன் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டனர்.

அப்போது, ரகளையில் ஈடுபட்ட கோஷ்டிக்கும், மனோஜ் நந்தன் கோஷ்டிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதல் உருவானது.

இதில் ஆத்திரமடைந்த எதிர் கோஷ்டியினர் அருகில் கிடந்த உருட்டுக்கட்டை மற்றும் கற்களை வீசி மனோஜ்நந்தன் தரப்பினரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜ்நந்தன், அவரது நண்பர் கார்த்தியை வெட்டினர்.

இதில் மனோஜ்நந்தனுக்கு மார்பு, முதுகு பகுதியிலும், கார்த்திக்கு உடலில் சில இடங்களிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த மோதலின்போது மனோஜ்நந்தனின் மற்ற நண்பர்களும் ஓடிவிட்டனர்.

இதற்கிடையில் சரிந்து விழுந்த மனோஜ்நந்தன் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து கத்திவெட்டில் காயமடைந்த இடத்தை சட்டையால் கட்டிக்கொண்டு, அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளில் ஏறி சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்வதற்காக குருவிநத்தம் நோக்கி புறப்பட்டார். அப்போது அங்குள்ள பால் சொசைட்டி அருகில் மனோஜ்நந்தன் மயங்கி விழுந்தார். இதை அறிந்து அங்கு வந்த அவரது நண்பர் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மனோஜ்நந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் கத்தி வெட்டில் காயமடைந்த கார்த்தி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த கொலை சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கடலூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story