144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா


144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா
x

புஷ்கரத் திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழாவாகும்.

மூன்றரைக்கோடி தீர்த்தத்துக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்து தங்கி இருப்பதாக ஐதீகம்.

12 வருடத்திற்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் நடைபெறும். இதை காவிரி புஷ்கரம் என்பர்.

ஒரு நதியில் நடைபெறும் இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்போது அதனை மகாபுஷ்கரம் என்று அழைப்பர்.

புஷ்கரத்துக்கும், குருப்பெயர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. இதுகுறித்து புராணம் கூறும் தகவல்:-

புஷ்கரம் என்பவர் ஒரு முனிவர். இவர் வருண பகவானின் தாய்மாமன் ஆவார். இவர் ஒருமுறை சிவனை நோக்கி கடும் தவம் இருந்து அவரிடம் இருந்து ஜலமூர்த்தியை (தீர்த்தம்) பெற்றார். இதனால் புஷ்கரம் 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதி ஆனார்.

பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கரம் தங்கி இருக்கிறார். ஒரு சமயம் குருபகவான் பிரம்மாவை நோக்கி கடும் தவம் இருந்தார். அப்போது பிரம்மா குருபகவான் முன்பு தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு குருபகவான் உங்களிடம் உள்ள 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியாகிய புஷ்கரத்தை தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரம்மாவும் ஒப்புக்கொண்டார். ஆனால் புஷ்கரம் இதற்கு சம்மதிக்க மறுத்து, பிரம்மாவிடம் நான் உங்களிடமே இருப்பேன். என்னை பிரித்து விடாதீர்கள் என்று வேண்டிக்கொண்டார்.

இதனால் பிரம்மா தர்மசங்கடம் அடைந்தார். கொடுத்த வாக்கை பின்வாங்காமல் பிரம்மா குருபகவானிடமும், புஷ்கரத்திடமும் சமாதானமாக பேசி ஒரு முடிவு எடுத்தார்.

அதன்படி குருபகவான் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிரவேசிக்கிறபோது அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி குருபகவான் மேஷ ராசியில் இருக்கும்போது கங்கை நதியிலும், ரிஷபத்தில் நர்மதை, மிதுனத்தில் சரஸ்வதி, கடகத்தில் யமுனை, சிம்மத்தில் கோதாவரி, கன்னியில் கிருஷ்ணா, துலாம் ராசியில் காவிரி, விருச்சிக ராசியில் தாமிரபரணி, தனுசில் சிந்து, மகரத்தில் துங்கபத்ரா, கும்பத்தில் பிரம்மபுத்ரா, மீனத்தில் பரணிதா நதியிலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ராசியிலும் குருபகவான் பிரவேசிக்கிறபோது அந்த ராசிகளுக்குரிய நதிகளில் முதல் 12 நாட்கள் புஷ்கரம் வசிக்க வேண்டும். இந்த 12 நாட்களில் சிவன், பிரம்மா, மகாவிஷ்ணு, பார்வதி, சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் அஷ்டதிக்கு பாலர்கள் வாசம் செய்வார்கள்.

அப்போது அந்த நதியில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் நீங்கி 3½ கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். அனைத்து கடவுள்களின் அருளாசியும் ஒருங்கே பெறலாம். கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும் என புராண நூல்கள் கூறுகின்றன.

குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயரும் நாள் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவின் தொடக்கத்தை குறிக்கிறது.

தாமிரபரணி புஷ்கரம் வருகிற 12.10.2018 தொடங்கி தொடர்ச்சியாக 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து 23.10.18 வரை அதாவது 23-ந் தேதி வரை தங்கி இருப்பார்.

இந்தியாவில் உள்ள கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, பரணிதா என்ற 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

தற்போது இந்த புஷ்கர விழா தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு வருவதால் தாமிரபரணி மகாபுஷ்கரம் என்ற பெயரில் வெகு சிறப்பாக தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலையில் இருந்து தாமிரபரணி பாயும் இடங்கள் முதல் திருச்செந்தூருக்கு வடதிசையில் கடலில் சங்கமிக்கும் வரை உள்ள புண்ணிய தீர்த்தக் கட்டங்களில் கொண்டாடப்படுகிறது.

புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுக்கிரஹோரையில் காஞ்சி சங்கராச்சாரியார், மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள் புனித நீராடி விழாவை தொடங்கிவைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான துறவிகள், பொதுமக்கள் புனித நீராடுகின்றனர்.

தாமிரபரணி புஷ்கரம் 2018 விழாக்குழு தலைமை அமைப்பாளர் எஸ்.மகாலட்சுமி சுப்ரமணியன் கூறியதாவது:-

திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதுபோல தாமிரபரணி நதியை தரிசித்தாலோ, அதை நினைத்தாலோ, ஸ்நானம் செய்தாலோ, அதன் தீர்த்தத்தை பருகினாலோ எல்லா பாவங்களும் அகன்று முக்தி பெறலாம் என்று தாமிரபரணி மகாத்மியம் புகழ்கின்றது.

இதைவிட இன்னும் உயர்வாக கலியுகத்தின் முடிவில் தாமிரபரணி தீரத்தில் கல்கி என்ற பெயரால் பகவான் விஷ்ணு அவதரிப்பார் என்று பாகவ தாதி புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்த தாமிரபரணி புஷ்கர திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது. 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு ஹோமங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறுகிறது.

13-ந் தேதி நவக்கிரக ஹோமம், 14-ந் தேதி துர்கா ஸ்வருப சுயம்வர கலாபார்வதி ஹோமம், 15-ந் தேதி பைரவ ஹோமம், வடுக பூஜை, 16-ந் தேதி மகா சுதர்சன ஹோமம், 17-ந் தேதி புத்ரகாமேஷ்டியாகம், சண்முக ஹோமம், 18-ந் தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், வித்யா மகா சரஸ்வதி ஹோமம், 19-ந் தேதி தன்வந்திரி ஹோமம், 20-ந் தேதி குபேர மகாலட்சுமி ஹோமம், 21-ந் தேதி மிருத்யுஞ்ஜய ஹோமம், 22-ந் தேதி ஆயுஷ்ய ஹோமம், 23-ந் தேதி மகா ருத்ர சத சண்டி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமங்களின்போது சங்கராச்சாரியார், ஆதினகர்த்தாக்கள், மடாதிபதிகள் கலந்துகொள்கின்றனர்.

12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் காலையில் சதுர்வேத பாராயணமும், மகாருத்ரஜபம், சண்டிபாராயணம் ஹோமங்கள் நடைபெறும். பிறகு அந்த கலச தீர்த்தங்கள் தினமும் மதியம் 12 மணியளவில் தாமிரபரணியில் சேர்க்கப்பட்டு புஷ்கர நீராடல் நடைபெறும். மாலை தாமிரபரணி ஆரத்தி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, ருதிரக்ரம அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் முதலானவை நடைபெறும்.

விழாக்காலங்களில் திருநெல்வேலி சுற்றுப்புற கோவில்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவும், ஹோமங்கள் யாகங்கள், வேதம், திருமுறை பாராயணம் ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாலை நேரத்தில் தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் தாமிரபரணி நதியில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்களை செய்தால் பன்மடங்கு பலனை தரும்.

இந்த மகா புஷ்கரமானது எல்லா ராசிக்கும் உகந்தது என்றும், இந்த குருப்பெயர்ச்சியின்போது மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. புஷ்கர காலங்களில் தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். பித்ருக்களுக்கு தர்பணம், திதி முதலிய சடங்குகள் செய்து முன்னோர்களை வழிபட்டால் பிதிர்சாபம் நீங்கி வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கப் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நவகைலாசம்-நவதிருப்பதி

தாமிரபரணி ஆற்றங்கரையில் 9 நவகைலாச சிவன் கோவில்களும், 9 நவ திருப்பதிகளும் உள்ளன. இன்னும் ஏராளமான சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள், பல அதிசயங்கள் நடந்த சுடலைமாடசாமி, கருப்பசாமி, அக்கினி மாடசாமி, உதிரமாடசாமி கோவில்கள், முருகன் கோவில்கள், சாஸ்தா கோவில்கள், பல தீர்த்த கட்டங்கள் உள்ளன.

தாமிரபரணியில் மொத்தம் 149 படித்துறைகளும், பல தீர்த்த கட்டங்களும் உள்ளன. அத்தாளநல்லூரில் யானைக்கு மோட்சம் வழங்கிய தீர்த்தக்கட்டமும், திருப்படைமருதூரில் நாறுபூநாத சுவாமி கோவில் படித்துறையும், அகஸ்தியர் தீர்த்தக்கட்டமும் தென்திருப்புவனத்தில் தட்சணாமூர்த்தி கால் மாறி உள்ள கோவிலும் உள்ளது. சேரன்மாதேவியில் அம்மையப்பநாதர் கோவிலும், அப்பன் வெங்கடாஜலபதி உள்ளிட்ட கோவில்களும் உள்ளன. முறப்பநாட்டில் தாமிரபரணி நதி தெற்கு நோக்கி ஓடுகின்ற தட்சண கங்கையாக உள்ளது. இங்கு குரு ஸ்தலம் உள்ளது.

தண்ணீரில் தாமிரசத்து

தாமிரபரணி ஆற்றில் காரையாறு, சேர்வலாறு, ராமநதி, கடனாநதி, பச்சையாறு, குற்றாலம் மலையில் உற்பத்தியாகி வருகின்ற சிற்றாறு ஆகிய ஆறுகளும் கலக்கின்றன. தாமிரபரணி ஆற்று தண்ணீரில் தாமிர சத்து அதிகமாக உள்ளது. ஆற்றங்கரையில் அரியவகை மூலிகைகள் காணப்படுகின்றன. ஆற்றில் மூலிகை தண்ணீரும் சேர்ந்து வருவதால், இதில் நீராடினால் பல நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள தீர்த்தக்கட்டத்தில் பலர் தீர்த்தமாடி தங்களுடைய நோயை குணப்படுத்தி உள்ளனர்.

இந்த ஆற்றில் ஒருமுறை நீராடினால் ஒரு லட்சம் முறை காயத்திரி மந்திரம் ஜெபித்த புண்ணியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

தரணி புகழும் தாமிரபரணி

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, அம்பாசமுத்திரம் படித்துறையில் தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்தபோது எடுத்த படம்.

ஒவ்வொரு நதிக்கும் ஒரு வரலாறு உண்டு. தாமிரபரணியின் வரலாறு தெய்வாம்சம் நிறைந்தது.

தட்சனின் மகளும், சிவபெருமானின் மனைவியுமானவர் தாட்சாயிணி. தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவபெருமானை அழைக்க மறுத்துவிட்டான். இதை அறிந்த தாட்சாயிணி கடும் கோபம் அடைந்து யாக சாலைக்கு சென்று யாகத்தில் குதித்துவிட்டாள். மறுபிறவியில் இமவான் மகளாக பார்வதிதேவி அவதாரம் செய்தார். அவர் பரமேசுவரனை திருமணம் செய்வதற்காக பராசக்தியை இடைவிடாது பூஜை செய்தார்.

அவரது பூஜைக்கு மனம் மகிழ்ந்த பராசக்தி, பார்வதி முன்தோன்றி அவரை ஆசீர்வதித்து, ‘உன் விருப்பம் நிறைவேறும்’ என்று ஒரு தாமிர புஷ்ப மாலையை பரிசாக அளித்தார். இந்த மாலையால் உலகுக்கு நன்மை ஏற்படும் என்று கூறி வாழ்த்தினார். பின்னர் சிவன்-பார்வதியின் திருமண நிகழ்ச்சி தொடங்கியது. இந்த அரிய திருமணத்தைக் காண மூவுலகில் உள்ள தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வந்து குவிந்தனர். சிவன்-பார்வதி திருமணத்தை காண அகத்தியர் தன் மனைவி லோபா முத்திரையுடன் வந்து இருந்தார்.

உலகம் முழுவதும் பூமியின் வடதிசையில் கூடி இருந்ததால் பாரம் தங்காமல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உடனே சிவபெருமான் உலகை சமன் செய்யும் பொருட்டு அகத்திய முனிவரை, லோகமுத்திரையுடன் தென்திசை செல்லும்படி உத்தரவிட்டார். சிவபெருமானின் திருமணக் கோலத்தை காண முடியவில்லையே என்று அகத்தியருக்கு வருத்தம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவ பெருமான் அகத்தியரிடம் தன்னுடைய திருமணக் காட்சியை அவர் இருக்கும் இடத்தில் காட்டுவதாக உறுதி அளித்தார்.

முன்பு பார்வதிக்கு பராசக்தியால் அளிக்கப்பட்ட தாமிர மாலையை சிவன் அகத்தியரிடம் அளித்தார். அந்த மாலையை அகத்தியர் பெற்றுக்கொண்டபோது திடீரென அது அழகிய பெண்ணாக உருமாறியது. இதைக் கண்ணுற்ற அங்கு கூடியிருந்த தேவர்கள் பூ மாரி பெய்தனர்.

தாமிர மாலையில் இருந்து தோன்றியதாலும், நல்ல சிவந்த நிறம் உள்ளதாலும் தாமிரபரணி என்றும் பலவாறு புகழ்ந்து போற்றினர். மேலும் அந்த தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும், உரிய காலத்தில் நதி உருவம் பெற்று சிறந்த மேன்மையை உண்டாக்குவாள் என்றும் ஈஸ்வரன் அருள்வாக்கு கூறி அவளையும் தன்னோடு தென்திசைக்கு அழைத்துச் செல்லுமாறு அகத்தியருக்கு உத்தரவிட்டார். அகத்தியரும் தாமிரபரணியுடன் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தாமிரபரணி உரிய காலம் வந்த உடன் நதி வடிவம் அடைந்தாள். பின்னர் பொதிகை மலையில் உள்ள குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருந்தும் குகையில் இருந்தும் உற்பத்தியாகி பூர்வவாகினியாகவும் உத்தரவாகினியாகவும் வெகுதூரம் பாய்ந்து சென்று இறுதியில் திருச்செந்தூருக்கு வடதிசையில் மூன்று பாகமாக கடலில் கலக்கிறாள்.

தாமிரபரணியின் இரண்டு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் குறிப்பாக நவகைலாயம், நவ திருப்பதி என போற்றப்படுகின்ற திருக்கோவில்கள் அமைந்து சிவ-விஷ்ணு ஒற்றுமையை பறைசாற்றுகின்றன.

ஆழ்வார்திருநகரியில் இருக்கும் நம்மாழ்வார் திருமேனி தாமிரபரணியின் புனித நீரால் உண்டாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

149 தீர்த்தக் கட்டங்கள்

தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறக்கூடிய படித்துறைகள் அனைத்தும் தீர்த்தக்கட்டம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு முதல் புன்னக்காயல் வரை பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றில் படித்துறைகளில் பூஜைகள் நடக்கிறது. முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஏரல், முக்காணி, ஆத்தூர், சேர்ந்தப்பூமங்கலம் ஆகிய இடங்களில் புஷ்கர விழா பூஜைகள் நடக்கிறது.

இந்த படித்துறைகளில் அந்தந்த ஊர் மக்கள் சார்பில் தினமும் புஷ்கர பூஜைகள், சிறிய அளவிலான ஹோமங்கள் நடத்தப்படுகிறது. தினமும் மாலையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நதி ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது.

முறப்பநாட்டில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அமிர்த மிருத்ஞ்சய ஹோமம் நடக்கிறது. பிரமாண்டமான அதிருத்ர பெருவேள்வி நடக்கிறது. மக்கள் தாமிரபரணிக்கு விளக்கு ஏற்றி ஆராதனை செய்யும் வகையில் தீபலட்சுமி பூஜை நடக்கிறது. இதில் மக்கள் தீபங்களை ஏற்றி ஆராதனை செய்யலாம்.

விழாவின் நிறைவுநாளான 24-ந் தேதி 5,004 திருவிளக்கு பூஜை நடக்கிறது. விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படுகிறது. அதே போன்று போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர்.

ஏற்பாடுகள்

தாமிரபரணி புஷ்கர விழா குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு புனித நீராட உள்ளனர். புனித நீராட வருகிறவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். போலீசார் பாதுகாப்பு வசதியுடன் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியையும் செய்வார்கள். ஆற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் விழா நடைபெறுகின்ற இடங்களில் தயார் நிலையில் இருப்பார்கள். மருத்துவ வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும்.

புஷ்கர விழா நடைபெறுகின்ற காலம் மழைக்காலமாக இருப்பதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை ஆகிய 2 இடங்களில் பக்தர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு தேவையான பாதுகாப்பு இல்லை என்பதால் அந்த 2 இடங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்த இந்து அறநிலையத்துறை அனுமதி மறுத்து உள்ளது. மற்ற இடங்களில் புஷ்கர விழா சிறப்பான முறையில் அதற்கான ஏற்பாடு செய்து உள்ள குழுவினரால் நடத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

புஷ்கர விழா


தாமிரபரணி புஷ்கர விழா 12-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்க உள்ளது. இந்த புஷ்கர விழாவை உலகம் போற்றுகின்ற வகையில் நடத்த வேண்டும் என்று துறவிகள் சங்கத்தினர், மடாதிபதிகள், ஆதினங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஏற்பாடு செய்து தங்களுடைய பணியை செய்து வருகிறார்கள்.



தாமிரபரணி புஷ்கர விழா நடத்த பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்படைமருதூர், முக்கூடல், அகஸ்தியர் தீர்த்தக்கட்டம் தென்திருப்புவனம், சேரன்மாதேவி, மேலசெவல், தேவமாணிக்கம், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், கொண்டாநகரம், நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, நெல்லை வண்ணார்பேட்டை மணிமூர்த்தீசுவரம், எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயூத்துறை, சீவலப்பேரி, முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் ஆகிய இடங்களில் உள்ள படித்துறைகளில் அரசு அனுமதி அளித்து இருந்தது.

தற்போது நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை ஆகிய 2 இடங்களில் பாதுகாப்பு இல்லை என்று கூறி அரசு அனுமதி மறுத்து உள்ளது. மற்ற இடங்களில் புஷ்கர விழா நடத்தவும், மக்கள் புனித நீராடவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

புஷ்கர விழாவின்போது என்ன தானம் செய்யலாம்?

தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறும் 12 நாட்களும் தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. ஒருமுறை தானம் செய்தால் அது பலமடங்கு பெருகுவதாக ஐதீகம்.

அதன்படி விழா தொடங்கும் முதல் நாள் தங்கம், வெள்ளி, தானியங்கள், பூமி ஆகியவற்றை தானமாக வழங்கலாம். 2-ம் நாள் வஸ்திரம் (துணி), உப்பு, மாடு, ரத்தினம். 3-ம் நாள் வெல்லம், காய்கறிகள், குதிரை, பழங்கள், வண்டி, 4-ம் நாள் நெய், எண்ணெய், தேன், பால். 5-ம் நாள் எருமை, காளை. 6-ம் நாள் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், வாசனை திரவியங்கள். 7-ம் நாள் வீடு, மனை, நாற்காலி, கிழங்கு, இஞ்சி. 8-ம் நாள் சந்தனக்கட்டை, பூக்கள். 9-ம் நாள் மஞ்சள். 10-ம் நாள் புத்தக தானம். 11-ம் நாள் யானை, குதிரை. 12-ம் நாள் எள், ஷோடசதானங்கள் ஆகியவற்றை வழங்கலாம்.

காவிரியில் அந்திம புஷ்கர விழா


புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயத்தில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் வாசம் செய்கிறார். குருபெயர்ச்சி ஆரம்பித்து முதல் 12 நாட்கள் ஆதிபுஷ்கரம் என்றும், அடுத்த குருபெயர்ச்சிக்கு முன்புள்ள 12 நாட்கள் அந்திம புஷ்கரம் என்றும் கொண்டாடப்படுகிறது. சென்ற வருடம் துலாம் ராசிக்கு அதிபதியான காவிரியில் ஆதிபுஷ்கரமானது 12-9-2017 முதல் 24-9-2017 வரை 12 நாட்கள் மயிலாடுதுறை துலா கட்டத்தில் கொண்டாடப்பட்டது.

அந்திம புஷ்கர விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 11-10-2018 வரை 12 நாட்கள் காவிரியில் கொண்டாடப்பட உள்ளது. மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியில் அந்திம புஷ்கர விழா 8-10-2018, 9-10-2018 ஆகிய தேதிகளில் வேதபாராயணத்துடன், சிறப்பு பூஜையுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

Next Story