வானவில் : உங்கள் காரில் இ.எஸ்.சி. இருக்கா?


வானவில் : உங்கள் காரில் இ.எஸ்.சி. இருக்கா?
x
தினத்தந்தி 10 Oct 2018 10:14 AM GMT (Updated: 10 Oct 2018 10:14 AM GMT)

தலைப்பைப் படித்தவுடன் இது விளம்பரத்தில் வரும் வாசகத்தை நினைவுபடுத்துகிறதா? ஆனால் உண்மையில் நீங்கள் பயன்படுத்தும் காரில் இ.எஸ்.சி. எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

சில கார்களில் இந்த தொழில்நுட்பமானது முன்னேறிய வகையில் உள்ளது. அதாவது வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும்போது அது என்ஜின் செயல்பாட்டைக் குறைக்கும். மீண்டும் வாகனம் கட்டுக்குள் வந்தால் மட்டுமே அது செயல்பட அனுமதிக்கும். வாகனம் கட்டுப்பாடு இழந்து செல்வதைத் தடுக்க இ.எஸ்.சி. உதவும்.

அமெரிக்காவில் இத்தகைய தொழில்நுட்பம் பின்பற்றப்பட்ட பிறகு நெடுஞ்சாலைகளில் பெருமளவிலான விபத்துகள் குறைந்துவிட்டதாக அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை போக்கு வரத்து பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை காப்பீடு அமைப்புகள் கூறியுள்ளன. மூன்றில் ஒரு பங்கு விபத்துகள் இதனால் குறைவதாக சுட்டிக்காட்டியுள்ளன.

ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இதே கருத்தைத் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் தங்கள் நாடுகளில் தயாராகும் கார்களில் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளன.

1983-ம் ஆண்டு முதல் முதலில் கார்களில் ஆன்டி ஸ்கிட் எனும் தொழில்நுட்பத்தை டொயோடா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதையடுத்து 1987-ல் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் மற்றும் பி.எம்.டபிள்யூ. நிறுவனங்கள் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை தங்களது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தின. ஆனால் இவை அனைத்துமே ஸ்டீரிங்குடன் தொடர்பு கொண்டவையாக இருக்கவில்லை.

1990-ம் ஆண்டில் மிட்சுபிஷி நிறுவனம் முதல் முறையாக ஒருங்கிணைந்த கண்ட்ரோல் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. இதற்கு டி.சி.எல். என பெயரிடப்பட்டது. இதன் மேம்பட்ட நுட்பமாக ஆக்டிவ் ஸ்கிட் அண்ட் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (ஏ.எஸ்.டி.சி.) புழக்கத்திற்கு வந்தது.

திருப்பத்தில் காரின் ஆக்ஸிலரேட்டரை டிரைவர் வேகமாக மிதித்தாலும், இதில் உள்ள சென்சார் (உணர் கருவி) காரின் வேகத்தைக் குறைத்துவிடும்.

ஆனால் படிப்படியாக இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 1992-ம் ஆண்டில் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்தது. 1987-ம் ஆண்டிலிருந்து 1992-ம் ஆண்டு வரையான காலத்தில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எலெக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் கண்ட்ரோல் புரோகிராம் உருவாக்கப்பட்டது.

1995-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ., மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்கள் முதல் முறையாக தங்கள் வாகனங்களில் இ.எஸ்.சி. எனப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு அனேகமாக அனைத்து கார் தயாரிப்பு நிறு வனங்களும் இந்த தொழில்நுட்பத்தை தங்களது கார்களில் வைக்கத் தொடங்கின.

பொதுவாக கார் ஓடும்போது பின் சக்கரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை இது கண்காணிக்கும். காரின் பாதை மாறாமல் இருக்கிறதா என்பதை இது தொடர்ந்து கண்காணிக்கும். ஸ்டீரிங் கட்டுப்பாடு இழக்கும்போதுதான் இ.எஸ்.சி. செயல்பட தொடங்கும். உடனடியாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்து என்ஜின் செயல்பாட்டை நிறுத்தும்.

கார் கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதை டிரைவர் உணர்வதற்கு முன்பாகவே இ.எஸ்.சி. உணர்ந்துவிடும். எத்தகைய தளத்திலும் அதாவது வழுக்கும் தரையாக இருந்தாலும் சரி இது செயல்படும்.

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள 7 கார்களில் இ.எஸ்.சி. தொழில்நுட்பம் உள்ளது.

மாருதி சியாஸ் (ரூ. 9.80 லட்சம்):
மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடல் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டது. இதில் மானுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாற்றும் வசதி உள்ளது. இதில் ஆட்டோமேடிக் கியர் மாற்றும் வசதி கொண்ட அனைத்து மாடல்களிலும் இ.எஸ்.சி. உள்ளது. சியாஸ்
மாடலில் இது கூடுதல் சிறப்பம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

போர்டு எக்கோ ஸ்போர்ட் (ரூ. 9.75 லட்சம்):


இந்த மாடல் காரில் ஏ.பி.எஸ். எனப்படும் ஆன்ட்டி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 2 ஏர் பேக்குகள் உள்ளன. இதில் பிரீமியம் மாடலில் கூடுதலாக 4 ஏர் பேக்குகள் மற்றும் இ.எஸ்.சி. வசதி தரப்படுகிறது. காம்பாக்ட் எஸ்.யு.வி. கார்களில் மிகவும் பாதுகாப்பான கார்கள் வரிசையில் இது இடம்பிடித்துள்ளது.

போர்டு ஆஸ்பயர் 1.5 டைட்டானியம் (ரூ.8.78 லட்சம்)

இந்த மாடலிலும் ஏ.பி.எஸ்., 2 ஏர் பேக் மற்றும் இ.எஸ்.சி. தொழில்நுட்பம் உள்ளது. பாதுகாப்பான செடான் மாடல் காராக இது கருதப்படுகிறது.

போர்டு பிகோ 1.5 டைட்டானியம் (ரூ. 8.25 லட்சம் )


ஆட்டோமேடிக் கியர் கொண்ட காரில் சற்று கூடுதல் விலை கொண்ட காரும் இதுவே. ஹாட்ச்பேக் மாடலில் இரட்டை கிளட்ச் கியர் பாக்ஸ் இதில் உள்ளது. இதில் இ.எஸ்.சி. நுட் பமும் புகுத்தப்பட்டுள்ளது. இது தவிர மலைப் பகுதியில் செல்லும்போது உதவும் ஹெச்.எல்.ஏ. (ஹில் லாஞ்ச் அசிஸ்ட்) இதில் உள்ளது.

போர்டு பிரீஸ்டைல் (ரூ. 7.41 லட்சம் )


இதில் ஆக்டிவ் ரோல் ஓவர் புரொடெக்‌ஷன் எனப்படும் பாதுகாப்பு நுட்பம் உள்ளது. விபத்து சமயத்தில் கார் உருண்டு விழும்போது காரின் செயல்பாட்டை நிறுத்திவிடும். இதில் இ.எஸ்.சி. நுட்பத்தோடு 6 ஏர்பேக்கும் பாதுகாப்பு அம்சத்துக்காக உள்ளன.


போக்ஸ்வேகன் போலோ ஜி.டி. டி.எஸ்.ஐ. (ரூ. 9.33 லட்சம்)

ஹேட்ச்பேக் மாடலில் மிகவும் பாதுகாப்பான கார் என்று கூறப்படுகிறது. காரின் பாதுகாப்பு தன்மை குறித்து சர்வதேச என்.சி.ஏ.பி. நிறுவனம் 4 ஸ்டார்களை அளித்துள்ளது. கார்கள் விபத்துக்குள்ளானால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கிராஷ் டெஸ்ட் மூலம் சோதித்து காரின் உறுதித்தன்மை அடிப்படையில் இந்நிறுவனம் ஸ்டார்களை சான்றாக அளிக்கும். அந்த வகையில் 4 ஸ்டார்களை எடுத்த கார் இதுவே. இதிலும் ஏ.பி.எஸ். மற்றும் 2 ஏர் பேக் உள்ளன. இது தவிர இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இ.எஸ்.சி. வசதி தரப்பட்டுள்ளது.

போக்ஸ்வேகன் அமெயோ 1.5 டி.டி.ஐ. ஏ.டி. இந்த மாடலிலும் (ரூ. 9.21 லட்சம் ) இ.எஸ்.சி தொழில்நுட்பம் உள்ளது. இதிலும் 2 ஏர் பேக் உள்ளன. மேலும் ஏ.பி.எஸ். தொழில்நுட்பமும் கூடுதல் பாதுகாப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Next Story