தினம் ஒரு தகவல் : ரெட் ஆக்சைடு தரை


தினம் ஒரு தகவல் : ரெட்  ஆக்சைடு  தரை
x
தினத்தந்தி 18 Oct 2018 3:00 AM GMT (Updated: 17 Oct 2018 5:07 PM GMT)

பழங்கால வீடுகளின் அடையாளமாக இருந்த பளபளப்பும் குளிர்ச்சியும் மிக்க சிவப்புநிற தரைகளை மறந்து பல ஆண்டுகளாகி விட்டன.

தரைத்தள பொருட்கள் புதிது புதிதாக அறிமுகமாகும் போதெல்லாம் ‘ரெட் ஆக்சைடு‘ தொழில்நுட்பம் ஒதுக்கப்பட்டு விடுகிறது.

நகர்ப்புறச் சூழ்நிலையில் ரெட் ஆக்சைடு தரைத்தளங்களை அமைக்க அதிக அவகாசம் தேவைப்படுவதால், வேகமாக அந்த தொழில்நுட்பம் பின்னுக்கு சென்றுவிட்டது.

அதனாலேயே எளிதாக தரைத்தளம் போட உதவும் கிரானைட் கற்கள், பளிங்குகள், விட்ரிபை டைல்ஸ்களைக் கட்டுமான நிறுவனங்கள் நாடத் தொடங்கி விட்டன. ஆனால் தற்போது கட்டிடங்களின் தரைகளை அலங்கரிக்கும் அத்தனை பளபளப்புகளுக்கும் அதிகபட்சமாக எரிபொருள் ஆற்றலும், பணமும் செலவழிக்கப்படுகின்றன.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு தரைகளில் பூசப்பட்ட ரெட் ஆக்சைடு தொழில்நுட்பத்தையும் இப்போது பயன்படுத்தப்படும் ரெட் ஆக்சைடு முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டின் தரைத்தளத்தில் இன்னமும் பளபளப்பு மாறவில்லை. ஆனால் தற்போது அமைக்கும் வீடுகளின் ரெட் ஆக்சைடு தரைத்தளம் பளபளப்பு இருப்பதில்லை. இன்று தயாரிக்கப்படும் உயர்தர சிமெண்டு சீக்கிரமே இறுகிவிடும் இயல்புடையது. அதேவேளையில் சீக்கிரம் நிறம் மங்கும் தன்மையும் அதில் உண்டு. ரெட் ஆக்சைடு பவுடரை இதில் கலக்கும்போது பழைய சிமெண்டு போல இறுகுவதற்கு அதிக நேரம் பிடிப்பதில்லை. அதனால் முன்பு கிடைத்த நிறத்தையும் பார்க்க முடியாது. நிறம் மங்குவதால் வெள்ளைத் திட்டுக்களும் ஏற்பட்டு விடுகிறது.

இலங்கையில் தரைத்தளங்களுக்கு இன்றளவும் ரெட் ஆக்சைடு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பெரிய பரப்பில் உள்ள தரைத்தளங்களுக்கு நவீன கால சிமெண்டு சீக்கிரமே இறுகிவிடுவதால் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் உஷ்ணமும் வெளிப்படும். சாதாரண சிமெண்டு அல்லது உலைச்சாம்பலில் ஆக்சைடைக் கலந்தால் பிசுபிசுப்பில்லாமலும், தொழிலாளர்கள் கையாள்வதற்கு ஏற்றதாகவும் இருக்கும். சுண்ணாம்புத்தூளைக் கலந்தால் சிமெண்டு வேகமாக இறுகுவது தவிர்க்கப்படும். இதனால் மேற்பூச்சு நன்றாக இருக்கும். பெரிய பரப்பில் தரைத்தளத்தை அமைக்கும் போது இடையில் கோடுகளை இடுவதன் மூலம் விரிசலைத் தவிர்க்கலாம்.

ரெட் ஆக்சைடு தரைகளைப் பொறுத்தவரை நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர் ஒருவரே விரிசல் இல்லாமல் பூசமுடியும். வீடுகளில் தரைத்தளத்திற்குப் பயன்படுத்தப்படும் கிரானைட் கற்களின் விலையில் மூன்றில் ஒரு பங்குவிலைதான் ரெட் ஆக்சைடு தரைக்கு ஆகும். ஆனால் தொழிலாளர் கூலி மட்டும் கொஞ்சம் அதிகம் ஆகும். திறந்த இடங்களிலோ, ஈரமான பகுதிகளிலோ ரெட் ஆக்சைடு தளங்களை இடுவதைத் தவிர்க்க வேண்டும். சுண்ணாம்பும், மெக்னீசியமும் நேரடி சூரிய ஒளியைத் தாங்காது.

ரெட் ஆக்சைடு தரைகள் ஒரு மகத்தான காலக்கட்டத்தை நினைவூட்டுவதாக உள்ளன. தென் இந்தியாவில் குறிப்பாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் உள்ள பழைய வீடுகளில் பவளக்கற்களைப் போல இந்த தரைகள் பளபளப்பதை பார்க்க முடியும். சரியான முறையில் கவனத்துடன் ரெட் ஆக்சைடு  பூசினால் உங்கள் வீட்டையும் ஒரு பிரத்யேக அழகாக மாற்ற முடியும்.

Next Story