நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி : விளைபொருட்களை நேரடியாக விற்கும் ராஜசேகரன்


நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி :  விளைபொருட்களை நேரடியாக விற்கும் ராஜசேகரன்
x
தினத்தந்தி 28 Oct 2018 11:59 AM GMT (Updated: 28 Oct 2018 11:59 AM GMT)

“ஒரு விவசாயி 365 நாள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற லாபத்தை ஒரு இடைதரகர் ஒரே நாளில் சம்பாதித்து விட்டு போய்விடுகிறார். இதை நினைக்கும்போது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்துச்சு.

அதனால நானே என்னோட விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இப்போ தினமும் இரண்டு மணி நேரத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கு காய்கறி வியாபாரம் பண்றேன்” என்று உற்சாகமாக சொல்கிறார், பெருந்துறை இயற்கை விவசாயி ராஜசேகரன்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு வெள்ளாளர் மேல்நிலைப் பள்ளி முன்பு காய்கறி வியாபாரம் செய்து வரும் இந்த இயற்கை விவசாயியை சந்தித்தோம். அவர் காய்கறிகளுடன் கூடிய டிராக்டர் வாகனத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். டிராக்டரில் இருந்து காய்கறிகளை இறக்கி தனித் தனியாக பிரித்து அடுக்கும் முன்பாகவே அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பியது. பள்ளி முடித்து குழந்தைகளை அழைத்து செல்வதற்கு வந்திருந்த தாய்மார்கள் கீரை கட்டுகளையும், காய்கறிகளையும் ட்ரேக்களில் எடுத்து எடை போட கொடுத்தனர். யாரும் எந்த பேரமும் பேசாமல் வாங்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

“இவங்க எல்லாரும் என்னோட ரெகுலர் கஸ்டமர்ஸ். சிலர் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்குவாங்க. சிலர் 500 ரூபாய்க்கு காய்கறி வாங்குவாங்க. பெரும்பாலும் எல்லாரும் பேரம் பேசாம வாங்கிட்டு போயிடுவாங்க. அதுக்கு 2 முக்கிய காரணம் இருக்கு. ஒண்ணு நான் விக்கிற காய்கறிகள் எல்லாமே எந்த ரசாயனமும் போடாம நானே விளைவிச்சது. இரண்டாவது, இயற்கை காய் கறியாக இருந்தாலும் மார்க்கெட்டில் அன்று என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அதே விலையில்தான் நானும் விக்கிறேன். அதனால திருப்தியாக வாங்கிட்டு போறாங்க” என்றார் ராஜ சேகரன்.

இரண்டு மணி நேரத்திலே, அவர் கொண்டு வந்த அனைத்து காய்கறிகளும் பெரும்பாலும் விற்று தீர்ந்தன. அதன்பிறகு அவருடன் சற்று விரிவாக பேசினோம்.

``நாங்க பரம்பரை விவசாய குடும்பம். அதனால விவசாயத்தை பத்தி எனக்கு நல்லா தெரியும். ஆனா, இடையில் கோழிப் பண்ணையும், கோழி மருந்து கடையும் நடத்திக்கிட்டு இருந்தேன். அப்போது ஈஷா யோகா கிளாஸ் போனேன். பின்பு சத்குருவோட வீடியோஸ் நிறைய பார்க்க ஆரம்பிச்சேன். அதில் ஒரு வீடியோவில் ‘நாம் எந்த தொழில் செஞ்சாலும் அது மக்களுக்கு நேரடியாக பயன்படவேண்டும்’ என்று கூறியிருந்தார். அதை கேட்டதுக்கு பிறகு கோழிப் பண்ணை தொழிலை விட்டுட்டு விவசாயத்துல முழு நேரமா கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

ஈஷா விவசாய இயக்கத்தோட பயிற்சி வகுப்புகளில் கலந்துகிட்டு இயற்கை விவசாயம் சம்பந்தமாக நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். கடந்த ஒன்றரை வருசமா முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். பெருந்துறை சீலம்பட்டியில் வீட்டுக்கு பக்கத்திலேயே 8 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்றேன். அதில் தென்னையும், அதுக்கு இடையில மணத்தக்காளி, வல்லாரை, முருங்கை, கொத்தமல்லி, தூதுவளை, பிரண்டைனு மொத்தம் 15 வகையான கீரைகளை சாகுபடி பண்றேன்.

அதே மாதிரி அங்கே இருந்து 5 கி.மீ தூரத்துல இன்னொரு இடத்துல 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் பண்றேன். அதில் 3 ஏக்கர்ல கதளி வாழை போட்டிருக்கேன். ஒரு ஏக்கரில் ரெட்லேடி பப்பாளி போட்டிருக்கேன். மீதி 2 ஏக்கரில் தென்னையும் அதுக்கு இடையில பப்பாளியும் போட்டிருக்கேன். ஊடுபயிரா வெங்காயம், தக்காளி, கத்தரி, அவரை போன்ற காய்கறிகளை சாகுபடி பண்றேன்” என்று தான் பயிரிட்டுள்ள விளைப்பொருட்கள் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து காய்கறி நேரடி விற்பனை குறித்து அவர் கூறியது...

“நான் இயற்கை விவசாயம் செய்வதை தெரிஞ்சுகிட்டு என்னோட தங்கச்சி அவங்க ஸ்கூலில் வேலை பார்க்குற டீச்சர்ஸ்க்கு அவைகளை விற்பனை செய்ய கேட்டுக்கிட்டாங்க. நானும் சம்மதித்து அவங்க ஸ்கூலுக்கு பைக்கில் காய்கறிகள் கொண்டு சென்று விற்க ஆரம்பிச்சேன்.

டீச்சர்ஸ் காய்கறிகள் வாங்குறதை பாத்துட்டு அங்க படிக்கிற குழந்தைகளோட பெற்றோர்களும் எங்களுக்கும் இயற்கை காய்கறிகள் வேணும்னு கேட்டாங்க. அப்படி தான் காய்கறி நேரடி விற்பனை தொடங்கியது. முதலில் பைக்கிலும், பின்பு காரிலும் கொண்டு வந்தேன். இப்போது டிராக்டர்ல கொண்டு வந்து விக்கிறேன்” என கூறியவரிடம் நேரடி விற்பனையை எப்படி வெற்றிகரமாக செய்வது என்று கேட்டோம்.

“நேரடி விற்பனையில் வெற்றி பெற வேண்டும் என்றால், முதலில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைைய சம்பாதிக்கணும். எப்பவுமே உங்களோட விளைப்பொருட்களோட தரத்துல கவனமா இருக்கணும். மார்க்கெட்டில் என்ன விலை இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி சரியான விலையை சொல்லணும். என்னோட வாடிக்கையாளர்களிடம் நான் எந்த விளக்கமும் சொல்வதில்லை. என்னோட காய்கறிகளை சாப்பிட்டு பாத்துட்டு அது தரமானதாக இருக்குறதை உணர்ந்து அவர்களே விரும்பி வாங்குகிறார்கள்.

இதுக்கு முன்னாடி இடைத்தரகர் மூலமாக விற்கும்போது, ஒரு கீரை கட்டு ரூ.3 அல்லது ரூ.4 விலை போகும். அதே கீரை கட்டுவை நான் இப்போ ரூ.8 முதல் ரூ.10 வரைக்கும் விக்கிறேன். கதளி வாழையை இடைத்தரகர் மூலமா விற்றால் கிலோ ரூ.35 கிடைக்கும். ஆனால் நேரடியா விற்கும் போது ரூ.45-க்கு போகுது. தோராயமா கணக்கு போட்டாலும் நேரடி விற்பனையில குறைஞ்சபட்சம் 20 சதவீதம் கூடுதல் லாபம் கிடைக்கும். இன்னும் அதிகமாக லாபம் பாக்கணும்னா பொருட்களை மதிப்பு கூட்டி விக்கணும்.

இன்னொரு முக்கியமான விஷயம் நீங்க கடை போடும் இடமும் உங்களோட லாபத்ைத தீர்மானிக்கும். உதாரணத்துக்கு, ஸ்கூல் முன்னாடி நான் கடை போட்டுருக்கேன். இங்க வெறும் காய்கறி மட்டும் விற்காமல், இளநீரும் விற்கிறேன். குழந்தை களுக்கு இளநீர் ரொம்பவும் பிடிக்கும். அதனால் வியாபாரமும் சிறப்பாக இருக்கு. இப்படி எந்த இடத்துல எதை விற்றால் நல்லா லாபம் பாக்கலாம்னு யோசிச்சு முடிவு எடுக்கணும்” என்று ஏராளமான ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார் ராஜசேகரன்.

மின்சார செலவை குறைப்பதற்கு 25 கே.வி சோலார் பேனல்களை பயன்படுத்தும் இவர், அடுத்தடுத்து ஏராளமான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார்.

இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் பெறவும், ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளவும் agro@ishaoutreach.org என்ற ஈமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

- தொடரும். 

Next Story