‘மீ டூ’ பிரச்சினை: ஆணாதிக்கம் தளர்கிறதா?


‘மீ டூ’ பிரச்சினை: ஆணாதிக்கம் தளர்கிறதா?
x
தினத்தந்தி 9 Nov 2018 6:44 AM GMT (Updated: 9 Nov 2018 6:44 AM GMT)

இன்றைய தேதியில் ‘மீ டூ’ பற்றி திரும்பிய இடமெல்லாம் பேசப்படும் விஷயமாக, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் விஷயமாக, இன்னும் குறிப்பாக திரைத்துறையை மெல்ல விழுங்கும் விஷ(ய)மாக மாறியிருக்கிறது.

ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து ஆரம்பித்த ஆண் பெண் ஈர்ப்பு, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது; இனியும் தொடரும். பருவம் அடைந்த பையனும் பெண்ணும், எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை யொன்று ஈர்க்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் காதலோடு பார்க்கவே செய்வார்கள். எதிர்பாலின ஈர்ப்பு என்பது பெண்கள் மீதான ஆண்களின் ஈர்ப்பு மட்டுமல்ல; ஆண்கள் மீதான பெண்களின் ஈர்ப்பையும் உள்ளடக்கியது தான்.

ஆண், பெண் பாலின ஈர்ப்பு என்பது இயல்பாக நடப்பது. இதை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1 மொழிவழி தொடர்பு. 2 உடல்வழி சீண்டல். 3 வற்புறுத்தல். 4 வன்புணர்ச்சி. இதில் எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், குழந்தைகள் மீதான அத்துமீறல் கொடுமையானது; ஜீரணிக்கவே முடியாதது. அதை விவாதிக்கவே வேண்டாம். அதேபோல் தான், நான்காவது வகையான பாலியல் வன்புணர்ச்சியும். எந்த சூழ்நிலையிலும், எந்த வயதுக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்கவே முடியாது. அதையும் விட்டுவிடுவோம்.

மேற்சொன்ன நான்கில், ஆசை வார்த்தை கூறுதல், காதல் கடிதம் எழுதுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மொழிவழி தொடர்புக்கு ஆளாகாத பெண்களே இல்லை எனலாம். இந்த முதல் வகையை முயற்சிக்காத ஆண்களே இல்லை என்றும் சொல்லிவிடலாம். முதல் வகையான மொழிவழி தொடர்பை, குற்றம் என்றே தனிப்பட்ட முறையில் கருதவில்லை.

மூன்றாம் வகையான வற்புறுத்தல், மேலதிகாரிகளுக்கும் அவர்களிடம் பணிபுரிபவர்களுக்கும்; உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்கள் இடையே நடக்கக்கூடிய பிரச்சினை. இங்கு தான், மீ டூ அத்துமீறல் ஆரம்பமாகிறது. இது, எதிர்பாலினத்தின் சம்மதம் இல்லாமல் நடக்குமேயானால், சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டதே. வற்புறுத்தல் எந்த அளவில் நிற்கிறது என்பதைப் பொறுத்து, சட்ட நடவடிக்கையையும் அந்த அளவில் நிறுத்தலாம்.

இரண்டாவது வகையான உடல் வழி சீண்டல், ஆண் பெண் இருவரும் இணைந்து பணிபுரியும் அலுவலகங்களில் அதிகம் நடக்கிற விஷயம். காவல்துறை, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், திரைப்படம், ஊடகங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடப் பணிகள் என்று இஸ்ரோ முதல் இணைய தளம் வரை எங்கெங்கெல்லாம் ஆண்களும் பெண்களும் இணைந்து பணிபுரிகிறார்களோ அங்கெல்லாம், இரண்டாம் வகை சீண்டல்கள் நடக்கவே செய்கின்றன.

இந்த இரண்டாவது வகையையும் கூட, ஒட்டுமொத்தமாக கிரிமினல் குற்றமாக கருதி விட வேண்டியது இல்லை; கொஞ்சம் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம்.

பெண்கள் இப்போதுதான் முதல் முறையாக, தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக வெளியே சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். நிச்சயமாக இது ஒரு யுகப் புரட்சி. முள் மேல் சேலை பட்டாலும், சேலை மேல் முள் பட்டாலும் பாதிக்கப்படுவது என்னவோ சேலை தான் என்று தத்துவம் சொல்லிச் சொல்லி, எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் பெண்கள் வெளியே பேசக்கூடாது என்று வளர்த்த ஆணாதிக்க சமூகம் இது. இந்த இடத்தில், ஆண்களின் ஆதிக்கத்தைத் தாண்டி, அழுத்தங்களை மீறி, பெண்கள் இதை பேச தொடங்கியிருப்பதே பெரும் வரவேற்புக்குரிய விஷயம்.

அதேசமயம், பெண்கள் சொல்லிவிட்டாலே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சொல்லிவிட்டது போல கருத வேண்டியது இல்லை. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளே மறுபரிசீலனைக்கு உட்பட்டவை எனும்போது, பெண்களின் குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இத்தகைய உடல்வழி சீண்டல்கள், அனுமதிக்கப்பட்டு நடந்தவையா? அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் நடந்தவையா? எதிர்பாராத விதமாக நடந்தவையா? தவறாக புரிந்து கொள்ளப்பட்டதன் அடிப்படையில் நடந்தவையா? தவறாக புரிந்துகொண்டாலும் பரவாயில்லை என்ற துணிவின் அடிப்படையில் நடந்தவையா? என பாகுபடுத்திப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலான பெண்களுக்கு, உடல்வழி சீண்டல்களை, குறிப்பாக மேல் அதிகாரிகளிடம் இருந்து வரக்கூடிய சீண்டல்களை எப்படி எதிர்கொள்வது என தெரிவதில்லை என்பது உண்மை. பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் அவர்களை துரத்துகின்றன. அதையே சாக்காக பயன்படுத்தி அதிகாரிகளும் துணிச்சலாக கை வைக்கிறார்கள். விசாகா கமிட்டி உள்பட ஆயிரம் ஆயிரம் தடைகள் வந்தாலும், அப்படி கமிட்டிகள் நடத்தி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையிலேயே இது போன்ற புகார்கள் கிளம்பி வருவது கவனிக்கப்பட வேண்டியது.

சுருக்கமாகச் சொல்வது என்றால், பாலியல் வன்புணர்ச்சி ஒருபோதும் ஏற்கக் கூடாதது; பாலியல் வற்புறுத்தலைத் தடுக்க வேண்டும்; உடல்வழி சீண்டல்களை தனித்தனியாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்; ஆண்பெண் உறவுகள் நல்ல நட்பாகும்; சில சமயம் காதலாகும்; பல சமயம் தவறான புரிதலாகும்; அரிதான சமயங்களில் வன்புணர்ச்சி ஆகவும் மாறிவிடுகிறது.

பெண்களின் மேன்மையை, மென்மையை புரிந்து, புரியவைத்து, காதல் மொழி பேசி வளரும் உறவுகளை கொச்சைப்படுத்துவது ஆகாது. அப்படி வரும் உறவுகள், பிற காரணங்களுக்காக உடையுமானால், அந்தத் தருணத்தில் அவர்களை ஆபாசமாக சித்தரிப்பது நியாயமாகாது.

-அழகிய சிங்கன் 

Next Story