கட்டுமானத்தில் கவனம்


கட்டுமானத்தில் கவனம்
x
தினத்தந்தி 9 Nov 2018 6:51 AM GMT (Updated: 9 Nov 2018 6:51 AM GMT)

வீடு கட்டுவது என்பது பலருக்கும் இருந்து வரும் ஒரு ஆசைதான். சொந்த வீட்டை அடைவதற்கு செலவிடும் பணமும், உடல் உழைப்பும் ஏராளம்.

பலரும் தங்கள் கனவு வீட்டை கட்ட கட்டுனரிடம் பணியை கொடுத்த கையோடு எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார் என ஒதுங்கி விடுவார்கள். ஆனால், கட்டுமானப் பணியின்போது நம் தலையீடும் கண்காணிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும். இது நம் வீட்டின் தரத்தை அதிகரிக்க நிச்சயம் உதவும்.

வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்டு, செங்கல், ப்ளோர், வர்ணம் என ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. பலரும் தரமான கட்டுமான பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் கட்டுமான கலவையில் கலக்கப்படும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு கலந்துள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெல்ல அரிமானத்துக்கு உள்ளாகும். அதனால் குடிநீரில் வீடு கட்ட வேண்டுமா என நினைக்க வேண்டாம். அதிகம் உப்பு கலக்காத தண்ணீராக இருப்பது அவசியம். முடிந்தால் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை பரிசோதனை செய்து பார்த்து அது கட்டுமானத்துக்கு உகந்ததா என பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

கட்டுனர்கள் கட்டுமான பொருள் வாங்க ஒவ்வொரு வர்த்தக நிறுவனத்தை தேர்வு செய்து வைத்திருப்பார்கள். எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி தரம் முக்கியம். எனவே வாங்கும் பொருட்களை சோதித்துப் பார்க்க தவற வேண்டாம். ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் சிமெண்டால்தான் அதை உறுதி செய்ய முடியும். சிமெண்ட் தரமானதா என்பதை அதன் நிறத்தை பார்த்தே ஓரளவு யூகித்து விடலாம். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட் என்கிறார்கள் கட்டுனர்கள்.

சிமெண்ட் மூடையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். சிமெண்ட் மூடையை வாங்கும்போது ரேண்டமாக மூடைகளின் அளவீடுகளை சரிபார்க்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை இருந்தால் அனுமதிக்கலாம். அதற்கு மேல் வேறுபாடு இருந்தால், விசாரிப்பும் கண்காணிப்பும் அதிகம் தேவை. 

Next Story