பூமி வெப்பமடைதல் குறித்த ஆய்வு


பூமி வெப்பமடைதல் குறித்த ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2018 3:30 AM GMT (Updated: 18 Nov 2018 5:48 PM GMT)

இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினை பூமி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம்.

 உலகிலுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அனைத்தும் ஒரு மையப்புள்ளியில் குவிவதாக வைத்துக்கொண்டால், அது பூமி வெப்பமடைதல் என்றே சொல்லலாம்.

மற்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் போலவே, பூமி வெப்பமடைதலுக்கும் அடிப்படைக் காரணம் கட்டுமீறிய நுகர்வுமயமும் பொருட்களை வாங்கிக் குவிப்பதும்தான். ஒவ்வொரு நவீன பொருளின் உற்பத்தியிலும் சூழலையும் உலகையும் சீர்குலைக்கும் ஏதோ ஒரு அம்சம் முகமூடி போட்டு உட்கார்ந்திருக்கிறது.

பருவநிலை மாற்றம் ஏற்கனவே பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. அதன் நேரடி தொடர்பை சொல்லும் உடனடி அறிவியல் நிரூபணங்கள் இப்போதைக்கு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

வெப்பநிலை உயர்வால் குதிப்பு மீன் குறைவதால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பும், தேனீக்கள் குறைவதால் தேன் சேகரிப்பில் ஏற்படும் பாதிப்பும் எளிய மக்களின் வாழ்க்கையில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தப்போகும் பாதிப்பை அழுத்தமாக உணர்த்துகின்றன.

பருவமழை தப்புவதால் ஏற்படும் வறட்சி, விவசாயிகள் தற்கொலை, கடல் நீர்மட்டம் உயர்வதால் தமிழகம் சந்திக்கப் போகும் பொருளாதார பாதிப்புகள், கடல் வளத்தை பெருக்கும் பவளத் திட்டுகள் அழிந்து வருவதன் தீவிரத்தையும், பூமி வெப்பமடைவதால் பெருகி வரும் தொற்றுநோய்களை பரப்பும் கொசுக்களைப் பற்றியும் ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.

பருவநிலை மாற்றம் பற்றி ஆராயும் பன்னாட்டு அரசு குழுவில் உள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும்கூட, இன்றைய சூழ்நிலையில் எந்த பாதிப்புக்கும் ஒற்றை காரணத்தை அறுதியிட்டுக் கூற முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். 

அதேநேரம், பருவநிலை மாற்றத்துக்கான அடிப்படைக் காரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டன. இயற்கைக்கு ஏதாவது வழியில் பாதிப்பை ஏற்படுத்தினால், அது பருவநிலை மாற்றத்துக்கு ஒரு வழியில் காரணமாகக்கூடும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

Next Story