கூச்ச சுபாவம் உடைய வேங்கைப் புலி


கூச்ச சுபாவம் உடைய வேங்கைப் புலி
x
தினத்தந்தி 20 Nov 2018 8:54 AM GMT (Updated: 20 Nov 2018 8:54 AM GMT)

நாம் நினைப்பதற்கு மாறாக வேங்கைப் புலி மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட ஓர் உயிரினம். உள்ளடங்கிய காட்டுப் பகுதியிலேயே வாழும்.

நமது கைரேகைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதைப் போல, ஒவ்வொரு வேங்கைப் புலியின் உடலில் உள்ள வரிகளும் வித்தியாசமானவை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு புலியையும் அடையாளம் காணவும், கணக்கெடுக்கவும் முடியும்.

வேங்கைப் புலியின் காலடி தடத்தை ‘புக்மார்க்’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். அதைக்கொண்டு ஒரு வேங்கையின் வயது, பாலின வேறுபாடு, எடை, உயரம் போன்ற விஷயங்களை கணிக்க முடியும். வேங்கைப் புலிகள் நடந்து செல்லும்போது, தங்கள் கூர்நகங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால் அவற்றின் காலடி தடத்தில் நகங்கள் இருக்காது.

அழகான சிவப்பு ஆரஞ்சு ரோமப்போர்வையின் மீதான வரிகளைக் கொண்ட தோலே, வேங்கைக்கு எதிரியாகிவிட்டது. ராஜாக்கள், வெள்ளைக்காரர்கள் முதல் சாமியார்கள், பணக்காரர்கள் வரை இந்தத் தோலுக்கு அடிமை. வேங்கைகளின் அழிவுக்கு அழகான ரோமப்போர்வையும் முக்கியக் காரணம். தோலில் நிறமிக் குறைபாடு காரணமாக, சில புலிகள் வெள்ளை பின்னணியில் சாம்பல் நிற வரிகளைக் கொண்டிருக்கும். இவை வெள்ளைப் புலிகள். உயிரினக் காட்சியகங்களில் இவற்றைப் பார்க்கலாம். சென்னை வண்டலூர் உயிரினக் காட்சியகத்தில் இருக்கிறது.

வயது, இரை கிடைக்கும் தன்மை, காட்டின் சூழல் காரணமாக சில வேங்கைப் புலிகள் ஆட்கொல்லிகளாக மாறிவிடுகின்றன. இப்படிப்பட்ட புலிகள் அரிதானவை. சாதாரணமாக எந்த தனிப்பட்ட காரணமும் இல்லாமல், தன்னை தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே வேங்கைப் புலிகள் மனிதனை தாக்குகின்றன. இந்தியாவை தவிர, வங்கதேசத்தின் தேசிய விலங்கும் வேங்கைப் புலிதான். ஒரு வேங்கையின் உறுமலை 3 கி.மீ. சுற்றளவுக்கு கேட்க முடியும். வேங்கைகள் இரவில் வேட்டையாடும். இரவில் அவற்றுக்கு பார்வை நன்றாக தெரியும்.

வேங்கைகளுக்கு தண்ணீர் ரொம்பவும் பிடிக்கும், நன்றாக நீந்தும். ஓடைகள், குட்டைகளில் இறங்கி உடல் வெப்பத்தை தணித்துக் கொள்ளும். வெப்ப மண்டலம், குளிர் காடுகளில் மட்டுமல்லாமல் சதுப்புநிலங்களிலும் வேங்கைகள் வாழும். எப்போதும் தண்ணீருக்கு அருகிலேயே இருக்கும். ஒரு வேங்கைப் புலி ஒரு முறைக்கு அதிகபட்சம் 27 கிலோ வரை உண்ணக் கூடும். சராசரியாக 5 கிலோ இரையை உண்ணும். இரை பெரிதாக இருந்தால் மறைத்து வைத்து, பசிக்கும்போது உண்ணும்.

காட்டெருமை, மான் போன்ற கொளம்புள்ள உயிரினங்கள் மட்டுமின்றி ஆமை, தவளை போன்ற சிறிய உயிரினங்களையும் வேங்கைப் புலிகள் உண்ணும். பூமியின் வடக்கு குளிர் பகுதிகளில் வாழும் புலிகள் பெரிதாகவும், எடை மிகுந்தும் இருக்கின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்பவை, அவற்றைவிட அளவில் சிறியவை. வேங்கைகளில் மிகப் பெரியது இந்தோசீனப் புலியே. 

Next Story