என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் அதிகாரி வேலை


என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் அதிகாரி வேலை
x
தினத்தந்தி 21 Jan 2019 6:19 AM GMT (Updated: 21 Jan 2019 6:19 AM GMT)

என்ஜினீயரிங் பட்டதாரிகள், கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படை, கடல் எல்லையை பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. நாட்டுக்குச் சேவை செய்வதுடன், நல்ல அந்தஸ்தையும் பெற்றுத்தரும் கடற்படை பணிகளில் சேர்வதை இளைஞர்கள் பலரும் கனவாக கொண்டுள்ளனர். கடற்படையும், தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் படைப்பிரிவில் சேர்த்து வருகிறது.

தற்போது கமிஷன் ஆபீஸர் (எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச்) ஜன - 2020 என்ற பயிற்சியில் சேர, பட்டதாரி என்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. திருமணமாகாத ஆண்கள் மட்டும் இதில் சேர விண்ணப்பிக்கலாம். மொத்தம் 102 பேர் இந்த பயிற்சி யில் சேர்க்கப்படுகிறார்கள். இவை சாட் சர்வீஸ் கமிஷனின் கீழ் வரும், குறுகிய கால பணிவாய்ப் பாகும்.

இந்த பயிற்சியில் சேர விரும்பும், விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

19½ முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-1-1995 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

பி.இ., பி.டெக் துறை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

டெக்னிக்கல் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் உள்பட குறிப்பிட்ட என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எக்சிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் இந்த படிப்புகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

உடல்தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். எக்சிகியூட்டிவ் விண்ணப்பதாரர்கள் பார்வைத் திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) மூலம் இதற்கான தேர்வு முறைகள் நடத்தப்படும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரரின் தகுதிகள் சோதிக்கப்படும். நுண்ணறிவுத் தேர்வு, படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடை பெறும்.

இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இது 14 ஆண்டுகள் பணிக் காலத்தைக் கொண்ட ஷாட் சர்வீஸ் கமிஷன் பணியாகும். அதற்கு பின்னர் விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் பணி நீடிப்பு பெற முடியும். சப்-லெப்டினன்ட் முதல் கமாண்டர் பதவி வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்று களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். நேர்காணலுக்கு அழைக்கப்படும்போது விண்ணப்பம் மற்றும் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

முக்கியத் தேதி:

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1-2-2019

மேலும் விரிவான விவரங்களை www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story