தினம் ஒரு தகவல் : ரோபோ எனும் எந்திர மனிதன்


தினம் ஒரு தகவல் :  ரோபோ எனும் எந்திர மனிதன்
x
தினத்தந்தி 22 Jan 2019 7:09 AM GMT (Updated: 22 Jan 2019 7:09 AM GMT)

மனிதனுக்கு நுண்ணறிவும், பகுத்துணரும் ஆற்றலும் இருக்கிறது. இதனால் செயல்பாடுகளில் நன்மை, தீமைகளை அறிந்து செயலாற்ற முடிகிறது. மேம்பட்ட அறிவால் மனிதன் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறான்.

மனிதனது மேம்பட்ட அறிவுத்திறனின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு தான், எந்திர மனிதன். எந்திர மனிதன் என்றால் என்ன என்று கேள்வி எழும்.

அதாவது, மனிதனுக்கு தேவையான பணிகளை செய்ய உயிருள்ள மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிரற்ற மின்னணு கருவி தான் இந்த எந்திர மனிதன். மனிதனால் உருவாக்கப்படும் இந்த எந்திர மனிதன் எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை அதனை உருவாக்கும் மனிதன்தான் முடிவு செய்கிறான்.

ஒரு எந்திர மனிதன் எந்த மாதிரியான வேலையைச் செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் புரோகிராம்களாக எழுதப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. இந்த புரோகிராம்களின் அடிப்படையில் அந்த எந்திர மனிதன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்கிறது.

சாதாரண ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்திற்கு மேல் வேலை செய்ய இயலாது. அலுத்துப் போய் சோர்ந்து விடுவார்கள். ஆனால், இந்த எந்திர மனிதன் எந்த அலுப்பும் இன்றி தனக்கு இட்ட வேலையை திரும்ப திரும்பவும், முறைப்படியும், துல்லியமாகவும் மனிதர்கள் வந்து நிறுத்தும் வரை செய்து கொண்டே இருக்கும்.

தற்போது, பல்வேறு நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகளில் கூட எந்திர மனிதர்களை பயன்படுத்துகிறார்கள். தொழிற்சாலைகளில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதில் எந்திர மனிதர்களை பயன்படுத்துவதால் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தியை எட்ட முடிகிறது. நச்சுக்காற்று நிறைந்த தொழிற்சாலைகளில் மனிதர்கள் பணி செய்ய முடியாது. இங்கு எந்திர மனிதர்களை பயன்படுத்துகிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான பயன்பாடுகளை சொல்லலாம்.

தற்போது வரை உருவாக்கப்பட்ட எந்திர மனிதர்கள் மனிதனின் உணர்வுகளான கண்களால் பார்த்தல், தொடும் உணர்ச்சி, ஒலியைக் கேட்டுணரும் திறன் ஆகியவைகளை பெற்றுள்ளன. ஆனாலும் இவை மனிதனின் முழுமையான செயல்பாடுகளுக்கு ஒப்பாக முடியாது. ஆனால், தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் என்ற துறையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அதாவது, ஒரு எந்திர மனிதன் தானே சிந்தித்து செயல்படும் வகையில் அதனை உருவாக்க முடியும் என்று தெரிகிறது.

அப்படி ஒரு காலகட்டம் வரும் போது உங்களுக்கு மறுநாள் உணவுக்கு தோசை வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள எந்திர மனிதனிடம் அதை தெரிவித்து விட்டால் அதுவே மாவை தயாரித்து மறுநாள் சரியான நேரத்திற்கு உங்களுக்கு தோசையை சுட்டுக் கொண்டு வந்து கொடுக்கும் அளவுக்கு செயல்படும். எல்லாம் அறிவியலின் மாயம்!

Next Story