2018 நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117 கோடி


2018 நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117 கோடி
x
தினத்தந்தி 22 Jan 2019 8:50 AM GMT (Updated: 22 Jan 2019 8:50 AM GMT)

4ஜி சேவை பரவலாகி வருகிறது. இந்நிலையில், 5ஜி எனும் செல்போன் அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் அறிமுகமாக உள்ளது.

தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இத்தொழில்நுட்பம் 2020-2021-ஆம் ஆண்டுகளில் பரவலாகி விடும்...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நம் நாட்டில், 2018-ஆம் ஆண்டு நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை (செல்போன்+ லேண்டுலைன்) 117 கோடி யாக உள்ளது.

0.15 சதவீத வளர்ச்சி

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

நம் நாட்டில், சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், நிகர அடிப்படையில் 17.4 லட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது 0.15 சதவீத வளர்ச்சியாகும். இதனையடுத்து தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்சமாக 88 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. அடுத்து பார்தி ஏர்டெல் நிறுவனம் 1.02 லட்சம் புதிய இணைப்புகளை அளித்து இருக்கிறது. பீ.எஸ்.என்.எல். நிறுவனம் ஏறக்குறைய 4 லட்சம் இணைப்புகளை வழங்கி இருக்கிறது. அதே சமயம் வோடா போன் 65 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது.

லேண்டுலைன் இணைப்புகள்

2018 நவம்பர் இறுதியில் லேண்டுலைன் இணைப்புகளின் எண்ணிக்கை 21.96 லட்சமாக குறைந்து இருக்கிறது. முந்தைய அக்டோபர் மாதத்தில் அது 22 லட்சமாக இருந்தது. இதே மாதத்தில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 51.19 கோடியாக இருக்கிறது. இதில் ஒயர் இணைப்பு இல்லாத அகன்ற அலைவரிசை இணைப்புகள் 49.39 கோடியாகும். லேண்டுலைன் வாயிலான இணைப்புகள் 1.81 கோடியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பரில், செல்போன் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றும் போர்ட்டபிலிட்டி (எம்.என்.பி) வசதி கேட்டு 32 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருக்கிறது.

இவ்வாறு டிராய் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

5ஜி தொழில்நுட்பம்

3ஜி தொழில்நுட்பம் விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 4ஜி சேவை பரவலாகி வருகிறது. இந்நிலையில், 5ஜி எனும் செல்போன் அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் அறிமுகமாக உள்ளது. தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இத்தொழில்நுட்பம் 2020-2021-ஆம் ஆண்டுகளில் பரவலாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாளும் விதத்தில் 5ஜி நெட்வொர்க் இருக்கும். தகவல் பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொலைத் தொடர்புத் துறையில், 2015-16-ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 130 கோடி டாலராக இருந்தது. சென்ற நிதி ஆண்டில் (2017-18) அது 5 மடங்கு அதிகரித்து 620 கோடி டாலராக உயர்ந்துள்ளது. உலகிலேயே மிக அதிகபட்சமாக நம் நாட்டில்தான் செல்போனில் இணையதள பயன்பாடு மாதம் ஒன்றுக்கு 340 கோடி ஜிகா பைட்டாக இருக்கிறது.

மதிப்பீடு

இந்தியாவில், தற்போது 104 செல்போன் உற்பத்திப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. 2020-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 1,500 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த மக்கள்தொகை தற்போது 120 கோடியாக உள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குள் செல்போன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 140 கோடியை எட்டும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

Next Story