ரூபாய் மதிப்பு அடிப்படையில் தேயிலை ஏற்றுமதி 2% குறைந்தது காபி ஏற்றுமதி 29 சதவீதம் சரிவு


ரூபாய் மதிப்பு அடிப்படையில் தேயிலை ஏற்றுமதி 2% குறைந்தது காபி ஏற்றுமதி 29 சதவீதம் சரிவு
x
தினத்தந்தி 23 Jan 2019 8:08 AM GMT (Updated: 23 Jan 2019 8:08 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

ரூபாய் மதிப்பு அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதத்தில் தேயிலை ஏற்றுமதி 2 சதவீதம் குறைந்துள்ளது. காபி ஏற்றுமதி 29 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

ஆர்தோடக்ஸ்

சர்வதேச அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. உயர்தர தேயிலையான ஆர்தோடக்ஸ் ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பெரும்பாலும் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

டிசம்பர் மாதத்தில் ரூ.573 கோடிக்கு தேயிலை ஏற்றுமதி ஆகி உள்ளது. 2017 டிசம்பரில் அது ரூ.585 கோடியாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 2 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதே காலத்தில், டாலர் மதிப்பில் தேயிலை ஏற்றுமதி 11 சதவீதம் சரிந்து (9.10 கோடி டாலரில் இருந்து) 8.10 கோடி டாலராக குறைந்துள்ளது.

நம் நாட்டில் காபி உற்பத்தியில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் இருந்து வருகிறது. காபி ஏற்றுமதியில் நம் நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகள் நம்மிடம் இருந்து அதிக அளவில் காபி வாங்குகின்றன.

டிசம்பர் மாதத்தில் காபி ஏற்றுமதி 35 சதவீதம் சரிவடைந்து (7.60 கோடி டாலரில் இருந்து) 4.90 கோடி டாலராக குறைந்து இருக்கிறது. அந்த மாதத்தில், ரூபாய் மதிப்பில் காபி ஏற்றுமதி 29 சதவீதம் சரிந்து (ரூ.487 கோடியில் இருந்து) ரூ.347 கோடியாக குறைந்து இருக்கிறது.

காபி நுகர்வு

நம் நாட்டில் காபி நுகர்வு குறைவாக உள்ளதால் உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது.

உள்நாட்டில் நுகர்வு மிகவும் அதிகமாக உள்ளதால் அதிக அளவு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. தேயிலை உற்பத்தியில் முன்னணி நாடுகளுள் ஒன்றான கென்யா அதன் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது.

Next Story