கல்யாணம் பழசு.. ஆசைகள் புதுசு.. இளம் பெண்களின் நவீனகால திருமண சிந்தனை


கல்யாணம் பழசு.. ஆசைகள் புதுசு.. இளம் பெண்களின் நவீனகால திருமண சிந்தனை
x
தினத்தந்தி 10 Feb 2019 6:00 AM GMT (Updated: 9 Feb 2019 11:26 AM GMT)

காலம் மட்டுமல்ல, காலத்திற்கு ஏற்ப பெண்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களிடம் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றங்களை சமூகம்தான் சரியாக புரிந்துகொள்வதில்லை.

காலம் மட்டுமல்ல, காலத்திற்கு ஏற்ப பெண்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களிடம் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றங்களை சமூகம்தான் சரியாக புரிந்துகொள்வதில்லை. திருமணம் இன்னும் பழைய பாணியிலே இருந்துகொண்டிருந்தாலும், திருமணத்தின் கதாநாயகிகளான பெண்களின் மனோநிலை புதிதாக இருக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு, அவர்களது வித்தியாசமான ஆசைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

எல்லா பெண்களுமே தங்களுக்கு வெளிப்படையாக பேசும் கணவரை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்களைப்போல பழகவேண்டும் என்றும் கருதுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் எத்தனை சதவீதம் தெரியுமா? 91 சதவீதம்!

ஆண்கள் மீதான பற்று பெண்களுக்கு குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் கடைசி காலம் வரை தங்களை பாதுகாக்கவேண்டும், பராமரிக்கவேண்டும் என்ற ஆசை பெண்களிடம் இல்லை. ஏன்என்றால் தங்கள் எதிர்கால கணவரிடம் அவைகளை எல்லாம் எதிர்பார்க்கும் பெண்கள் 15 சதவீதம்தான்.

கணவரிடம் அதிகபட்ச அன்பு, செக்ஸ், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 35 சதவீதம் மட்டுமே!

குறைந்தது 6 மாதமாவதுபழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தரவேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். பார்த்ததும் திருமணம், பின்பு அவசர அவசரமாக தேனிலவு போன்றவைகளில் பெண்களுக்கு விருப்பம் இல்லை.

பழைய காலத்து மாடல் பெண் பார்க்கும் சடங்கில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், ‘இவர்தான் உன் வருங்கால கணவர்’ என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் பெரும்பாலான இளம் பெண்கள் சொல்கிறார்கள்.

தனக்கான வரனை பெற்றோரே முடிவு செய்துவிடக்கூடாது என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பமாக இருக்கிறது. அவர்கள் வரனின் வேலை, சம்பளம், குடும்பம், சொத்து இவைகளைத்தான் பார்க்கிறார்கள். அவைகள் திருப்திபட்டால், அந்த மாப்பிள்ளைக்கு ஓ.கே சொல்லி விடுகிறார்கள். அவர் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு சரிப்பட்டு வருவார் என்பது தங்களுக்குத்தான் தெரியும் என்று இளம் பெண்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம். நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று, 78 சதவீத பெண்கள் அதிரடியாக சொல்கிறார்கள்.

18 சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் போய் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். ‘அங்கு நிறைய பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக’ அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சதவீத பெண்கள் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அவர்கள் விளக்கமாக பதில்சொல்ல முன்வரவில்லை.

கணவருக்கு வேறு பெண்களோடு இருந்த தொடர்பு பற்றி கேள்வி எழுப்பமாட்டோம் என்று 22 சதவீத பெண்கள் சொல்வது அதிர்ச்சிகலந்த உண்மை.

பெரும்பாலான பெண்கள் 25 முதல் 30 வயதுக்குள் திரு மணம் செய்துகொண்டால் போதும் என்று கருத்து தெரிவி்க்கிறார்கள்.

திருமணத்தில் ஆர்வம் இல்லாத பெண்கள்கூட, ‘திரு மணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம்’ என்கிறார்கள். காரணம், ‘வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம்’ என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

‘அதுக்கு எதுக்கு ஆடம்பரம்’ என்று என்று சொல்லும் 40 சதவீத பெண்கள் ‘அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

திருமணம் முடிந்த மறுநாளே தூக்கிவீசப்படும் அழைப்பிதழுக்காக நிறைய பணத்தை செலவிடவேண்டியதில்லை. அது ரொம்ப சிம்பிளாக இருந்தால் போதும் என்று 81 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தங்கள் கணவர் சினிமா கதாநாயகன்போல் அழகாக இருக்கவேண்டியதில்லை என்று 64 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்றுதான் பெரும்பாலான பெண்கள் கூறியிருக்கிறார்கள். அளவோடு மது அருந்துபவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று 3 சதவீத பெண்களே சொல்கிறார்கள். இது அருந்துபவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள் என்ற பயம், 93 சதவீத பெண்களிடம் இருக்கிறது.

(தனியார் நிறுவனம் ஒன்று எடுத்திருக்கும் கருத்துக்கணிப்பு இது)

தங்கள் மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் பேசும் அளவுக்கு கணவர் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரம்தரவேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா இளம்பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் அளவு 94 சதவீதம்.

‘நீ கன்னித்தன்மை கொண்டவள்தானா?’ என்று வருங்கால கணவர் கேட்டால், பதிலுக்கு அவரிடம் அதே கேள்வியை திரும்பகேட்போம் என்று 14 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். ‘அப்படிப்பட்ட பழமைவாதியை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று 65 சதவீத பெண்கள் சொல்கிறார்கள்.

Next Story