ஜனவரி மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.8,064 கோடி


ஜனவரி மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.8,064 கோடி
x
தினத்தந்தி 13 Feb 2019 9:44 AM GMT (Updated: 13 Feb 2019 9:44 AM GMT)

2025-ஆம் ஆண்டிற்குள் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஏறக்குறைய 4 மடங்கு உயர்ந்து ரூ.94 லட்சம் கோடியை எட்டும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

ஜனவரி மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் (எஸ்.ஐ.பி) ரூ.8,064 கோடி முதலீட்டை ஈர்த்து இருக்கின்றன.

நிர்வகிக்கு சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

ரூ.23.37 லட்சம் கோடி

2018-ஆம் ஆண்டு இறுதியில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.22.85 லட்சம் கோடியாக இருந்தது. ஜனவரி இறுதியில் இது ரூ.23.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆக, மாதாந்திர அடிப்படையில் இத்துறையின் சொத்து மதிப்பு 2.2 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

2025-ஆம் ஆண்டிற்குள் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஏறக்குறைய 4 மடங்கு உயர்ந்து ரூ.94 லட்சம் கோடியை எட்டும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது. அப்போது சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என மகிந்திரா ஏ.எம்.சி. நிறுவனம் கூறி இருக்கிறது.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் பெரும்பாலான திட்டங்கள் அதிக முதலீட்டை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக அண்மைக் காலத்தில் இத்துறையின் சீரான முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து வருகிறது.

பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்களில், ஜனவரி மாதத்தில் ரூ.8,064 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 21 சதவீதம் அதிகமாகும். முந்தைய மாதத்தில் (டிசம்பர்) முதலீடு ரூ.8,022 கோடியாக இருந்தது. இதனையடுத்து இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் கணக்குகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக இருக்கிறது.

15 பெரிய நகரங்கள்

புதுடெல்லி (என்.சி.ஆர். உள்பட), மும்பை (தானே, நவி மும்பை உள்பட), கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பரோடா, சண்டிகர், ஐதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பன்ஜிம், பூனா மற்றும் சூரத் ஆகியவை இந்தியாவின் 15 பெரிய நகரங்களாக இருக்கின்றன.

இந்த 15 நகரங்கள் அல்லாத சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பரஸ்பர நிதி துறையினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பலனாக இத்துறையின் எஸ்.ஐ.பி. திட்டங்களில் சிறிய, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.

புதிய முதலீட்டாளர்கள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Next Story