சமூகநீதி நாளில் களமாட வாருங்கள்


உலக சமூக நீதி தினம்
x
உலக சமூக நீதி தினம்
தினத்தந்தி 20 Feb 2019 6:18 AM GMT (Updated: 20 Feb 2019 6:18 AM GMT)

இன்று (பிப்ரவரி 20-ந் தேதி) உலக சமூக நீதி தினம். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி ஐக்கிய நாடுகளின் அமைப்பு கொண்டு வந்த தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 20-ந் தேதி, “உலக சமூக நீதி தினமாக” அனுசரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டு 2009-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சமூக நீதிக் கோட்பாட்டின் கூறுகளை முன்வைத்து நடத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு 2019-ன் கருப்பொருள், அமைதி, வளர்ச்சி என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி, சமூக நீதி தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் அமைப்பு உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

உலகில் வாழும் மக்கள் அனைவரும் பொருளாதாரம், உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, பாலியல், சாதி, இனம், மதம், மொழி, வயது, கலாசாரம், மாற்றுத்திறனாளிகள், மருத்துவம் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஒரே சமூகமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற பரந்த நோக்கில் இந்த நாளை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

உலக அமைப்பு இத்தகைய சிந்தனைகளை தற்போதுதான் உணர்ந்துள்ளது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே இத்தகைய சிந்தனைகளை, சமூகநீதியை மக்களிடம் பிரசாரம் மற்றும் போராட்டங்கள் வழியே கொண்டு சேர்த்தவர் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் ஆவார். ‘பேதமில்லா வாழ்வே, பெருவாழ்வு’ என்றார் தந்தை பெரியார். இதில் உலக அமைப்பு இன்று கூறும் அத்தனை பாகுபாடுகளும் உள்ளடக்கம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக நீதி என்ற கொள்கைக்காக பாடுபட்ட பல தலைவர்கள் உள்ளனர். 19-ம் நூற்றாண்டில் மராட்டியத்தில் பிறந்த ஜோதிராவ் பூலே, அவரது மனைவி சாவித்திரி பூலே, அரசமைப்புச் சட்டம் தந்த பாபாசாகிப் அம்பேத்கர், கோலாப்பூர் மன்னர் சாகு மகராஜ், கேரளத்தில் நாராயணகுரு, வட நாட்டில் ராஜாராம் மோகன்ராய், வினோபா பாவே ஆகியோர் சமூக மாற்றத்திற்கு போராடியுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, சமுக நீதிக்காகவே தந்தை பெரியார் காங்கிரசில் சேர்ந்தார். அது நிறைவேறாது என்று, தெரிந்தவுடன், அதற்காகவே அந்த கட்சியில் இருந்து, வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைக் கண்டார் என்பது வரலாறு.

ரஷிய நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பு, சமூக நீதி நாளை ‘சமூக நீதி மற்றும் அனைவருக்கும் மரியாதைமிக்க வாழ்வு’ என்ற கோஷத்தை முழங்கியது.

ஆனால், தந்தை பெரியார் 1925-லேயே, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, நாட்டு மக்களிடையே, சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், பெரும்பான்மை மக்கள் படும் அவலத்தையும், இழிவையும் தோலுரித்துக் காட்டினார்.

அனைவருக்கும், அனைத்தும் என்ற கோட்பாட்டில் தொடங்கப்பட்டது தான், தென்னிந்திய நல உரிமை சங்கம் எனும் நீதிக் கட்சி. அதன் ஒப்பற்ற தலைவர்கள் சர் பிட்டி தியாகராயர், டாக்டர் எம்.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர் மற்றும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், பனகல் அரசர், முத்தையா முதலியார் என பல தலைவர்கள் சமூக நீதிக் களத்தில், இன்றைய தமிழகம், அன்றைய சென்னை ராஜதானியில், அரும்பெரும் பணி செய்தார்கள்.

இதன் விளைவாகத்தான், அனைத்து வகுப்பு மக்களுக்கும் வகுப்புரிமை எனும் இட ஒதுக்கீடு முறை தமிழகத்தில் 1928-ம் ஆண்டு முதல் 1950 வரை நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை, கல்வியுரிமை, சொத்துரிமை என்ற உரிமைகளை தமிழகம் ஏனைய மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக வழங்கியது.

1947-ல் சுதந்திரம் அடைந்த இந்தியாவிலும், வகுப்புரிமை போராட்டம், சமூக நீதிப் போராட்டமாக தந்தை பெரியாரால் நடத்தப்பட்டது. அரசியல் களத்தில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் என தொடர்ச்சியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்கும், உயர்வுக்கும், வளர்ச்சிக்குமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இன்று பல மாநிலங்கள், இந்த திட்டங்களை நிறைவேற்ற முன் வந்திருப்பதன் மூலம், தமிழகம் எந்த அளவிற்கு சமூக நீதியில் முன்னோக்கி வளர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சமூக நீதி நாளை கொண்டாட ஐக்கிய நாடுகள் நிறுவனம் முடிவு செய்த நாள் நவம்பர் 26. அதே நாளில்தான், இந்தியாவில், அரசமைப்புச் சட்டம் உருவாக்கிட அரசியல் நிர்ணய சபை உருவானது. சமூக நீதி முதன்மையான கோட்பாடாக, அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், அண்ணல் அம்பேத்காரால் உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டின் அனைத்து பாகுபாடுகளிலும், சாதி என்பது மூலாதாரம். ஆகவே, சாதி ஒழிய வேண்டும் என்று தந்தை பெரியார் தலைமையில் பத்தாயிரத்திற்குமேல் அரசியலமைப்பின் சாதி பாதுகாப்புப் பிரிவை கொளுத்திய நாளும் நவம்பர் 26 (1957) தான்.

ஆகவே, சமூக நீதி தினத்தை கொண்டாடுவதில் ஏனைய மக்களைவிட, தமிழக மக்கள் கொண்டாட அதிக உரிமை படைத்தவர்கள். சமூக நீதி தினத்தை நாம் கொண்டாடும் இந்த நாளில், தற்போது இதற்கு ஏற்பட்டுள்ள சவாலை நாம் குறிப்பிட்டாக வேண்டும். மத ரீதியாக, சாதி ரீதியாக, ஆண் பெண் பேதம், மத்திய, மாநில உறவில் வேறுபாடுகள், ஒரே மொழி, ஒரே உணவு என்ற உணர்வு, இவையெல்லாம் இன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்த சவாலை சந்தித்து, முறியடிக்கும் பணியில் தந்தை பெரியாரின் இயக்கம் அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது. இன்றைய இளைஞர்கள், சமூக நீதி நாளின் உளப்பூர்வமான நோக்கத்தைப் புரிந்துகொண்டு களமாட வேண்டிய தருணம் இது.

வீ.அன்புராஜ்

Next Story