பிப்ரவரி மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.8,095 கோடி


பிப்ரவரி மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.8,095 கோடி
x

2025-ஆம் ஆண்டிற்குள் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஏறக்குறைய 4 மடங்கு உயர்ந்து ரூ.94 லட்சம் கோடியை எட்டும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

பிப்ரவரி மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் (எஸ்.ஐ.பி) ரூ.8,095 கோடி முதலீட்டை ஈர்த்து இருக்கின்றன.

தங்கத்தில் முதலீடு

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் பெரும்பாலான திட்டங்கள் அதிக முதலீட்டை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக அண்மைக் காலத்தில் இத்துறையின் சீரான முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து வருகிறது.

ரூ.23.37 லட்சம் கோடி

2018-ஆம் ஆண்டு இறுதியில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.22.85 லட்சம் கோடியாக இருந்தது. ஜனவரி இறுதியில் இது ரூ.23.37 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிப்ரவரி மாதத்தில் ரூ.23.16 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.89 சதவீதம் குறைவாகும். நிதிச்சந்தை மற்றும் வருவாய் திட்டங்களில் அதிக அளவில் முதலீடுகள் வெளியேறியதே இதற்குக் காரணமாகும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் ரூ.8,022 கோடி முதலீட்டை ஈர்த்து இருந்தது. ஜனவரி மாதத்தில் அது ரூ.8,064 கோடியாக இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் இத்திட்டங்களில் ரூ.8,095 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது.

15 பெரிய நகரங்கள்

புதுடெல்லி (என்.சி.ஆர். உள்பட), மும்பை (தானே, நவி மும்பை உள்பட), கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பரோடா, சண்டிகர், ஐதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பன்ஜிம், பூனா மற்றும் சூரத் ஆகியவை இந்தியாவின் 15 பெரிய நகரங்களாக இருக்கின்றன.

இந்த 15 நகரங்கள் அல்லாத சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பரஸ்பர நிதி துறையினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பலனாக இத்துறையின் எஸ்.ஐ.பி. திட்டங்களில் சிறிய, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.

அண்மைக் காலமாக இத்திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் வளர்ச்சி வேகம் குறைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (2018 ஏப்ரல்) பரஸ்பர நிதி நிறுவனங்களின் எஸ்.ஐ.பி. திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை, நிகர அடிப்படையில், 4.81 லட்சம் உயர்ந்து இருந்தது. டிசம்பர் மாதத்தில் இது 1.87 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது.

2025-ஆம் ஆண்டிற்குள் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஏறக்குறைய 4 மடங்கு உயர்ந்து ரூ.94 லட்சம் கோடியை எட்டும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது. அப்போது சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என மகிந்திரா ஏ.எம்.சி. நிறுவனம் கூறி இருக்கிறது.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. 

Next Story