தினம் ஒரு தகவல் : மண்புழு உரம்


தினம் ஒரு தகவல்  : மண்புழு உரம்
x
தினத்தந்தி 16 March 2019 9:15 AM GMT (Updated: 16 March 2019 9:15 AM GMT)

உலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் உள்ளன. இவற்றில் உரத்துக்காகவும், இனப் பெருக்கத்துக்காகவும் பயன்படுபவை மிகச் சில. இதில் மண்ணின் மேற்பரப்பில் வாழும் புழுக்களே, மண்புழு உரம் தயாரிக்க மிகவும் ஏற்றவையாக கருதப்படுகின்றன.

ஆப்பிரிக்க நாட்டு மண்புழு பொருளாதார ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த புழு வெளியேற்றும் கழிவு அதிகமாக இருப்பதால் மண்புழு உர உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.

மாடு, ஆடு, குதிரை, யானை, கோழி உள்ளிட்டவைகளின் கழிவுகள், கரும்பு, வாழை இலை, நெல், கோதுமை, தினை, ஆகாயத்தாமரை, தென்னை, மரக்கழிவுகள் உள்ளிட்ட பண்ணைக்கழிவுகள், ரசாயனம் கலக்காத ஆலை கழிவுகள், சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வரும் கழிவுகள், காகிதம் மற்றும் பருத்தி ஆலைக்கழிவுகள், சர்க்கரை ஆலையில் இருந்து வரும் கரும்புச் சக்கைகள் உள்ளிட்ட ஆலை கழிவுகளில் இருந்தும் மண்புழு உரம் தயாரிக்கலாம்.

தோட்டங்களில் குழி வெட்டியும், தொட்டிகள் அமைத்தும் மண்புழு உரம் தயாரிக்கலாம். தொட்டிகள் அமைத்து தயாரிக்க 10 அடி நீளம், 7 அடி அகலம், 3 அடி உயரம் கொண்ட தொட்டிகள் அமைக்க வேண்டும். இந்த தொட்டிகளில் மேற்குறிப்பிட்ட கழிவுகளுடன் மாட்டுச்சாணம் கலந்து மண்ணை தொட்டியில் நிரப்ப வேண்டும். இதில் ரசாயனம் கலந்த பொருட்கள், கல், கண்ணாடி, பிளாஸ்டிக், பீங்கான் போன்ற பொருட்கள் இல்லாமல் கழிவுகளை அடுக்கடுக்காகப் போட வேண்டும்.

தொட்டியில் கழிவுகள் இட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். ஈரப்பதம் 40 முதல் 50 சதவீதம் வரை பராமரிப்பது புழுக்களின் வளர்ச்சிக்கு நல்லது. தொட்டிகளின் மேல் பகுதி வழியாக பல்லிகள், பறவைகள், எலி, தவளைகள் புழுக்களை சாப்பிட்டுவிடாமல் இருக்க கம்பி வலைகள் அமைப்பது பாதுகாப்பை தரும். ஒவ்வொரு தொட்டிக்கும் குறைந்தது 2,000 புழுக்களை விட வேண்டும். ஈரப்பதம் குறையாமல் தண்ணீர் தெளித்து வரவேண்டும். இந்தப் புழுக்கள் ஒரு நாளைக்கு 5 கிலோ கழிவை எருவாக மாற்றும். 1 டன் ஈரக்கழிவுகளில் ஏறக்குறைய 300 கிலோ மண்புழு உரம் கிடைக்கும்.

தொட்டியில் இருந்து 50 முதல் 60 நாட்களில் மண்புழு உரம் எடுக்கலாம். எடுப்பதற்கு, சில நாட்களுக்கு முன்பு தொட்டிகளுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்த வேண்டும். ஈரப்பதம் இல்லாதபோது புழுக்கள் தொட்டியின் அடிப்பகுதிக்கு சென்றுவிடும். அப்போது கழிவுகளை மேல் பகுதியில் குவித்து வைக்க வேண்டும். குவித்து வைத்த உரத்தை சல்லடைகளில் சலிக்க வேண்டும். சலிக்கும்போது உரத்தில் உள்ள குச்சி, கல் போன்ற பொருட்கள் தனியாக பிரிந்துவிடும். சில நேரம் முட்டை, சிறிய புழுக்கள் இருக்கலாம். அவற்றை பிரித்தெடுப்பதற்கும் இம்முறை உதவும்.

மண்புழு உரத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் இருப்பதுடன் அங்கக பொருட்கள், பயிருக்கு தேவையான நுண்ணூட்ட சத்துகள், பயிர் ஊக்கிகள் பெருமளவில் உள்ளன. மண்புழு உரம் ஈரத்தை மண்ணில் நிலைநிறுத்தும். மண் அரிப்பை தடுக்கும். மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளை அதிகரிக்கும். மண்புழுக்கள் மண்ணில் ஊடுருவி செல்வதால் மண்ணை துகள்களாக்குகின்றன. இதன் காரணமாக மண் பொலபொலவென்றாகி பயிர்களின் வேர்கள் நன்கு ஊடுருவுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பயிர்களின் வேர்களுக்கு போதிய காற்றோட்டமும் கிடைக்கிறது.

Next Story